சிறையில் உண்ணாவிரதம்: கைதிகள் இடமாற்றம்!!
மதுரை:
மதுரை மத்திய சிறையில் இலங்கை மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து உண்ணாவிரதம் இருந்த சிறைக் கைதிகள் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றம் செய்யப்படவுள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்களை பார்க்க முறையாக அனுமதி பெற்று வந்த இலங்கை மீனவர் சங்கத் தலைவர் கனீசியஸ் பெர்னாண்டோவை சிறைக் காவலர் தேவராஜன் தீவிரவாதி என நினைத்து சுட்டுக் கொன்றார்.
கைதிகளை பார்க்க முறையாக அனுமதி பெற்று வந்தவரை போலீசார் சுட்டுக் கொன்றது பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இதனை கண்டித்து மதுரை மத்திய சிறையில் இருக்கும் கைதிகள் உண்ணாவிரதம் இருந்தனர்.
அதிகாரிகள் கேட்டுக் கொண்டதையடுத்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.
இந் நிலையில் உண்ணாவிரத போராட்டத்திற்கு தலைமை தாங்கிய கைதிகள் மதுரை சிறையிலிருந்து வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
இதில் நாகர்கோவில் ரெளடி லிங்கம் கொலை வழக்கில் கைதான விஜி கடலூர் சிறைக்கும், மற்ற கைதிகள் வேலூர், திருச்சி மற்றும் சென்னை சிறைகளுக்கும் மாற்றப்பட்டு வருகின்றனர்.
கைதிகளின் இந்த இடமாற்றத்தை கண்டித்து அவர்களுக்கு ஆதரவாக பிற கைதிகள் சிறையில் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதனால் மதுரை மத்திய சிறையில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.