ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். மீனவர்கள் பிடித்து வைத்திருந்த இறால் மீன்கள், வலைகள் உள்ளிட்டவற்றையும் பறித்துச் சென்று விட்டனர்.
ராமேஸ்வரத்திலிருந்து ஏராளமான மீனவர்கள் திங்கள்கிழமை காலை 500க்கும் மேற்பட்ட படகுகளில் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படை வீரர்கள் விரைந்து வந்தனர்.
தமிழக மீனவர்களை சுற்றி வளைத்துத் தாக்கினர். பின்னர் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும், வலைகளையும் பறித்துக் கொண்டு தமிழக மீனவர்களை அங்கிருந்து விரட்டியுள்ளனர்.
இலங்கை படையினரின் இந்கத அத்துமீறல் செயலால் தமிழக மீனவர்கள் பெரும் கோபமும், அதிருப்தியும், வேதனையும் அடைந்துள்ளனர்.
இலங்கை கடற்படையினரின் கொட்டத்தை அடக்க மத்திய அரசும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.