சிவகங்கை சாமியாரை மணந்த ஆஸ்திரிய பெண்
சிவகங்கை:
மூலிகை ஆராய்ச்சிக்காக சிவகங்கை வந்த ஆஸ்திரிய நாட்டு பெண் அங்கு சாமியாரை திருமணம் செய்து கொண்டு அவரும் சாமியாராகிவிட்டார்.
ஆஸ்திரிய நாட்டை சேர்ந்தவர் மாரிங்கா(40). இவர் மூலிகை ஆராய்ச்சிக்காக கடந்த 7 வருடங்களுக்கு முன் சிவகங்கை அருகேயுள்ள புதூரில் உள்ள சுருளிகுன்றுக்கு வந்தார்.
அப்போது அங்கு வசிக்கும் சாமியாரை சந்தித்தார். அவரது பெயர் வைத்தியலிங்கசுவாமி (53). இவர் இப்பகுதியில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலின் அருகே வசித்து வருகிறார். கோவிலையும் நிர்வகித்து வருகிறார்.
அது தவிர இவர் அரியவகை மூலிகைகளான ஓரிதழ் தாமரை, சதையொட்டி, கீரிப்பூண்டு, சிவஞானவேம்பு போன்றவற்றையும் வளர்த்து வருகிறார் சாமியார்.
மூலிகை ஆராய்ச்சிக்காக வந்திருக்கும் மாரிங்கா, வைத்தியலிங்க சாமியோடு தங்கி மூலிகைகள் குறித்து ஆராய்ச்சி செய்து வந்தார். இருவரும் இணைந்து அப்பகுதியில் பல மூலிகை செடிகளை வளர்த்துள்ளனர். அப்படியே அவர்களுக்குள் காதலும் வளர்ந்து விட்டதாம். இதனால் மாரிங்கா இந்து மதத்துக்கு மாறி பெயரையும் காளியம்மன் என மாற்றிக் கொண்டுவிட்டார். இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.
நன்றாக தமிழும் பேசக் கற்றுக் கொண்டுவிட்ட மாரிங்கா என்ற காளியம்மன் கூறுகையில்,
நான் தற்போது அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் அம்மன் பற்றி ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வருகிறேன். சீனா, இந்தோனேஷியா, தென் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சென்று வந்துள்ளேன். ஆனால் எனக்கு பிடித்த நாடு இந்தியா தான்.
பாதுகாப்பு காரணங்களுக்காகத் தான் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். மற்றபடி எங்களுக்குள் எந்தவித தாம்பத்ய உறவும் கிடையாது.
அலோபதி மருத்துவத்தை விட இயற்கை மருத்துவமே சிறந்தது ஆகும். இதில் எந்த பக்க விளைவுகளும் இல்லை. வாதநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறேன்.
அம்மன் புகழைப் பரப்ப இணைய தளமும் ஆரம்பித்துள்ளேன். இந்தப் பகுதியில் முதியோர்கள் பலபேர் ஆதரவின்றி அனாதையாக விடப்படுகிறார்கள். அவர்களைப் பாதுகாக்க முதியோர் இல்லம் கட்டுவதுதான் எனது லட்சியம் என்கிறார்.












Click it and Unblock the Notifications