லஞ்சம் கேட்டு போலீஸ் துன்புறுத்தல்-தீ குளிக்க முயற்சி
புதுக்கோட்டை:
லஞ்சம் கேட்டு போலீஸ் துன்புறுத்தியதால் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி. இவர் வீட்டு வேலை செய்யும் இடத்திற்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் சமீபத்தில் திருட்டு போய் உள்ளது. இது தொடர்பாக விசாரணை என்ற பெயரில் அந்தோணியை அழைத்து சென்ற போலீசார் வழக்கை விரைந்து முடிக்க அவரையே கைது செய்து விட்டனர்.
இதன் பின் அந்தோணி ஜாமீனில் வெளியே வந்தார். தவறே செய்யாத தன்னை வழக்கிலும் கைது செய்ததோடு, அதிலிருந்து விடுவிக்க லஞ்சமும் கேட்டு போலீசார் தொல்லை தந்ததால் வெறுத்துப் போனார் அந்தோணி.
இது குறித்து மாவட்ட எஸ்பி, மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கும் புகார் அனுப்பினார். இந்த விவரம் தெரியவரே போலீசார் மீண்டும் அந்தோணியை அடித்து, உதைத்தோடு பணம் கேட்டு துன்புறுத்தியுள்ளனர்.
இதனால் மனம் நொந்து போன அந்தோணி நேற்று புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் கேனுடன் வந்து உடலில் ஊற்றிக் கொண்டு தீக் குளிக்க முயன்றார்.
ஓடிவந்த கலெக்டர் அலுவலக அதிகாரிகள் அவரை காப்பாற்றினர். தகவல் அறிந்த போலீசார் மீண்டும் அந்தோணியை கைது செய்துள்ளனர்.