உடனே உதவிய ப.சிதம்பரம்-திருச்சி கலெக்டர்!
திருச்சி:
பார்வையற்றவர்களுக்கு இசைக் கருவிகள் வாங்க ரூ. 25,000 பணத்தை வழங்கி உதவியுள்ளனர் நிதியமைச்சர் ப.சிதம்பரமும் திருச்சி கலெக்டர் ஆசிஷ் வச்சானியும்.
திருச்சியில் கண் பார்வையற்றவர்கள் இணைந்து பாடும் நிலா என்ற பெயரில் இசைக்குழுவை நடத்தி வருகின்றனர்.
இக்குழுவினர் அரசு விழா, கோவில் திருவிழா, மற்றும் திருமணம் போன்ற பல்வேறு நிகழ்சிளில் பாடி பலருடைய பராட்டை பெற்றுள்ளனர்.
இக்குழுவினர் இசைக் கச்சேரிக்கு இசை கருவிகளை வாடகைக்கு எடுத்து தான் வாசித்து வருகின்றனர். இக்குழுவின் தலைவர் காத்தவராயன் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திடம் இசைக் கச்சேரிக்கு இசை கருவிகளை வாங்க நிதி உதவி செய்ய வேண்டி மனு கொடுத்தார்.
அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க மத்திய அமைச்சர் சிதம்பரம், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்திருந்தார். அதன் பேரில் பார்வையற்றவர்களுக்கு இசைக் கருவிகள் வாங்க ரூ. 25,000யை திருச்சி கலெக்டர் ஆசிஷ் வச்சானி உடனடியாக வழங்கினார்.
தங்களின் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த சிதம்பரத்துக்கும், மாவட்ட கலெக்டருக்கும் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.