மோடிக்கு எதிராக காங்கிரஸின் "குற்றப்பத்திரிக்கை"
டெல்லி:
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அரசின் முகமூடியைக் கிழிக்கும் வகையில், அவரது அரசுக்கு எதிராக அடுத்த மாதம் குற்றப்பத்திரிக்கை வெளியிடப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பி.கே.ஹரிபிரசாத் கூறுகையில், மோடி அரசுக்கு எதிராக அடுத்த மாதம் காங்கிரஸ் கட்சி குற்றப்பத்திரிக்கை வெளியிடும். அதில் மோடி அரசின் தவறுகள், சதிச் செயல்கள், சிறுபான்மையினருக்கு எதிராக அவர் செய்த துரோகங்களை பட்டவர்த்தனமாக வெளியிட்டு மோடியின் முகத்திரையைக் கிழிப்போம்.
குஜராத் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது. கற்பழிப்புகளும், கொலைகளும் சாதாரணமாகி விட்டன. விவசாயிகள் எண்ணற்ற துயரங்களை அனுபவித்துக் கொண்டுள்ளனர்.
பாஜகவிலிருந்து காங்கிரஸ் கட்சிக்கு வந்துள்ள 9 அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கும் காங்கிரஸ் சார்பில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும். இருப்பினும் இதுகுறித்து கட்சி மேலிடம்தான் முடிவெடுக்க முடியும் என்றார் அவர்.
குஜராத்தில் டிசம்பர் மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications