அரிசி கடத்தலை தடுக்க முயன்ற சப் இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற 4 பேர் கைது
திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே ரேசன் அரிசியை கடத்த முயன்றதைத் தடுக்க முயன்ற சப் இன்ஸ்பெக்டரை லாரி ஏற்றி கொல்ல முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து கேரளாவுக்கு ரேசன் அரிசி அன்றாடம் கடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக செங்கோட்டையை அடுத்த புளியரை வழியாக கேரளாவுக்கும், பணகுடி வழியாக கன்னியாகுமரியில் இருந்து கேரளாவுக்கும் ரேசன் அரிசி மூடைகள் அதிக அளவில் கடத்தப்பட்டு வருகின்றன.
இந்த கடத்தலை தடுக்க மாவட்ட எல்லைகளான செங்கோட்டையை அடுத்த புளியரையிலும், வள்ளியூரை அடுத்த பணகுடியிலும் போலீசார் செக்போஸ்ட் அமைத்து வாகனங்களை தணிக்கை செய்கின்றனர்.
இந்த செக்போஸ்ட் அமைக்கப்பட்டதில் இருந்து இந்த பகுதிகளில் அடிக்கடி ரேசன் அரிசி மூடைகள் லாரியுடன் பிடிபடுகின்றன. இதேபோல் சில இடங்களில் குடோன்களில் பதுக்கி வைத்தும் அரிசி கடத்தப்படுவதை போலீசார் கண்டிபிடித்து பறிமுதல் செய்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்துள்ளனர்.
கடந்த 18ம் தேதி நெல்லை அருகே சுத்தமல்லியில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 17 தன் ரேசன் அரிசி மூடைகள் மற்றும் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. லாரி டிரைவர் ரமேஷ், கீளனர் முத்துலிங்கம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
பணகுடி பைபாஸ் ரோட்டில் பழவூர் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை போலீசார் மறித்தனர். ஆனால் மினி லாரி நிற்காமல் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் மீது மோதும் நோக்கத்தில் வேகமாக வந்தது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மயிரிழையில் உயிர் தப்பினார்.
நிற்காமல் வேகமாக சென்ற லாரியை போலீசார் ஜீப்பில் விரட்டி சென்று பிடித்தனர். அதன் பின்னர் அந்த லாரியை சோதனையிட்டதில் அதில் தலா 50 கிலோ எடை கொண்ட 63 மூடைகள் ரேசன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் மினி லாரி டிரைவர் நாகர்கோவில், இருளப்பபுரத்தை சேர்ந்த விஷ்ணுகுமார், கிளீனர் மகேஷ், லாரியில் வந்த ராஜேஷ் மற்றும் முத்துக்குமார் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
அவர்கள் மீது ரேசன் அரிசி கடத்தல் மற்றும் சப்-இன்ஸ்பெக்டரை மினி லாரி ஏற்றி கொல்ல முயன்றது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.மேலும் 63 மூடை ரேசன் அரிசி மற்றும் 4 லட்ச ரூபாய் மதிப்புள்ள மினிலாரியையும் பறிமுதல் செய்தனர்.