சேது திட்டத்துக்கும் பழைய வீராணம் கதி தான்-ஜெ
சென்னை:
பழைய வீராணம் திட்டம் என்ன கதியை அடைந்ததோ அதே நிலையை நோக்கிதான் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டமும் சென்று கொண்டிருக்கிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பழைய வீராணம் திட்டம் என்ன கதியை அடைந்ததோ, அதே நிலையை நோக்கிதான் சேது சமுத்திரக் கால்வாய் திட்டமும் சென்று கொண்டிருக்கிறது. வீராணம் திட்டம் அதோ கதியை சந்தித்தது. அதே வரலாறு மீண்டும் நிகழப் போகிறது.
இந்த திட்டம் குறித்து புதிதாக மீண்டும் ஆய்வு செய்து உச்ச நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க ஒரு குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது. இந்தக்குழு வல்லுநர்களை கொண்ட குழு என்று மத்திய அரசு சாதிக்கிறது. இக்குழுவில் இடம் பெற்றுள்ள 3 நிபுணர்களால் ராமர் என்ற காவிய நாயகன் இருந்தாரா இல்லையா என்பதை மட்டுமே உறுதி செய்யமுடியும்.
இந்தக் குழுவில் கடலோர மக்களின், குறிப்பாக மீனவர்களின் பிரச்சனைகளை விவாதிக்க, சமூக அறிவியாலளர்கள் யாரும் இல்லை.
கடல் பயணங்கள் குறித்த பிரச்சனைகளை விவாதிக்க இந்தக் குழுவில் கடல் மற்றும் கப்பல் சம்பந்தப்பட்ட வல்லுநர்கள் யாரும் இல்லை. சேது சமுத்திரக் கால்வாய் சர்வதேச கடல் வழியாக அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேசப் பாதுகாப்பு துறையை சார்ந்தவர்கள் எவரும் இல்லை.
சுனாமியால் ஏற்கனவே பாதிப்பு அடையக்கூடிய இந்தப் பகுதியில் கடலுக்கடியில் ஓடுகிற நீரோட்டம் அதன் விளைவுகள் குறித்து விவாதிக்க கடலியம் நிபுணர்கள் எவரும் இல்லை.
இந்த திட்டம் பொருளாதார ரீதியாக தமிழகத்தை உயர்த்தக் கூடிய திட்டம் என்று பிரசாரம் செய்யப்படும் தருணத்தில், பொருளாதார நிபுணர்கள் இந்த குழுவில் இடம்பெறவில்லை. இது போன்ற குறைகள் இந்தக் குழுவின் நம்பகத்தன்மை குறித்தும், இந்தக்குழு சமர்ப்பிக்க இருக்கும் அறிக்கையின் உண்மைத் தன்மை குறித்தும் பெருத்த சந்தேகத்தை எழுப்புகின்றன.
எனவே, எந்த அடிப்படையில் மேற்காணும் குழுவை மத்திய அரசு நியமித்தது என்ற கேள்வியை நான் எழுப்புகிறேன். மேற்காணும் குழுவை உடனடியாக கலைத்துவிட்டு மேலே குறிப்பிட்டுள்ள துறைகளை சார்ந்த வல்லுநர்கள் மட்டும் அல்லாமல் வரலாறு மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர்களைக் கொண்ட உண்மையான பாரபட்சமற்ற அதிகாரமுள்ள குழுவை மத்திய அரசு அமைக்கவேண்டும்.
இந்தக் குழு வெளிப்படையான முறையில் ஒரு பொது விவாதத்தை நடத்த, பொதுமக்கள், பத்திரிகையாளர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளை சார்ந்தவர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்க வேண்டும். அவர்களுடைய கருத்துக்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications