3வது அணித் தலைவர்களுடன் பிரகாஷ் காரத் திடீர் சந்திப்பு
டெல்லி: அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தில் மத்திய அரசுடன் மோதல் போக்கை மேற்கொண்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் இன்று திடீரென டெல்லியில் 3வது அணித் தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டது அரசியலில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
அணு ஆயுத ஒப்பந்த விஷயத்தில் முதலில் இறங்கி வர மறுத்த பிரதமர் மன்மோகன் சிங், சமீபத்தில் ஒப்பந்ததத்தைக் கைவிடுவதாக அறிவித்தார். இதனால் மத்தியில் அரசு கவிழும் நிலை உருவானகி நிலைமை சகஜமானது.
இந் நிலையில் பிரதமர் மீண்டும் தனது நிலையில் பிடிவாதம் பிடிக்கத் தொடங்கியுள்ளார். ஒப்பந்த்ததை அமலாக்க விடாவிட்டால் பதவி விலகவும் தயார் என அறிவித்துள்ளார்.
தனது கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களான லாலு, சரத் பவார் மற்றும் திமுகவின் பாலு ஆகியோருடன் பேசிய பிரதமர் தன்னை கூட்டணிக் கட்சிகள் கைவிட்டுவிட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்த விஷயத்தில் இடதுசாரிகளுடன் திமுகவும் கைகோர்த்துக் கொண்டது குறித்து பாலுவிடம் வெளிப்படையாகவே தனது கோபத்தை பிரதமர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந் நிலையில் ஒப்பந்ததை கைவிட்டுவிட்டீர்களா இல்லையா என்பதை தெளிவாகக் கூறுமாறு பிரதமருக்கு இடதுசாரிகள் நெருக்கடி தந்து வருகின்றன. நவம்பர் 16ம் தேதிக்குப் பின் அது குறித்து தெரிவிப்பதாக அமைச்சர் பிரணாப் முகர்ஜி மூலம் பதில் தந்துள்ளார் பிரதமர்.
குஜராத் தேர்தல் முடியும் வரை பொறுமை காத்துவிட்டு பின்னர் இடதுசாரிகளின் எதிர்ப்பையும் மீறி அணு ஒப்பந்தத்தை அமலாக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
இந் நிலையில் காங்கிரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் வகையில், மூன்றாவசு அணியில் அங்கம் வகிக்கும் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அமர்சிங், தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் எர்ரன் நாயுடு ஆகியோரை பிரகாஷ் காரத் இன்று திடீரென சந்தித்துப் பேசினார்.
தங்கள் எதிர்ப்பை மீறி மத்திய அரசு செயல்பட்டால் எந்த நிலைக்கும் செல்வோம் என்பதை இதன்மூலம் இடதுசாரிகள் காங்கிரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகக் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications