சேது- ஆய்வு கமிட்டியை எதிர்த்து சு.சுவாமி வழக்கு!
டெல்லி: மத்திய அரசு அமைத்துள்ள 10 உறுப்பினர் கொண்ட சேது சமுத்திர ஆய்வுக் கமிட்டியைக் கலைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி மனு தாக்கல் செய்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே சுப்ரமணியம் சுவாமி தொடர்ந்துள்ள வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 3 மாத கால அவகாசத்தில் இந்தப் பிரச்சினையை சுமூகமாகத் தீர்க்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது.
இதையடுத்து ராமர் பாலத்தை இடிக்காமல், சேது சமுத்திரத் திட்டத்தை எப்படி நிறைவேற்றுவது என்பது குறித்து ஆராய மத்திய அரசு 10 உறுப்பினர்களைக் கொண்ட கமிட்டியை நியமித்துள்ளது.
இந்த நிலையில் இந்தக் கமிட்டியைக் கலைக்கக் கோரி சுவாமி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தனது மனுவில், மத்திய அரசு நியமித்துள்ள சேது சமுத்திர ஆய்வுக் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் எஸ்.ராமச்சந்திரன், ராமர் பாலத்திற்கு எதிரான கருத்தைக் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரியும்.
இதேபோல இன்னொரு உறுப்பினரான ஆர்.சி.சர்மா, இந்து சமுதாய விரோத கருத்துக்களைக் கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அனுதாபி. இதேபோல, தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு கழக (நீரி) துணை இயக்குநரான எஸ்.ஆர்.வாடே, ராமர் பாலத்தை இடிக்கும் வகையிலான சேது சமுத்திரத் திட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்தவர்.
மேலும் ராமர் ஜென்மபூமி வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்த இவர், ராமர் பிறந்த இடத்தில்தான் பாபர் மசூதி கட்டப்பட்டதாக கூறுவதற்கு ஆதாரம் இல்லை என்று கருத்து தெரிவித்திருந்தார்.
மேலும், ராமச்சந்திரன், ராமர் பாலம் என்பது இயற்கையாக உருவான பாலம் போன்ற அமைப்புதான் என்று முன்பு கருத்து தெரிவித்திருந்தவர்.
இப்படி ராமர் பாலத்திற்கு எதிரான, ராமருக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டவர்களை உறுப்பினர்களாக கொண்டு ஒரு கமிட்டி அமைத்திருப்பதால், இந்தக் கமிட்டியின் அறிக்கை நியாயமானதாக இருக்கும், பாரபட்சமின்றி இருக்காது என்று உறுதியாக கூற முடியாது.
ராமர் பாலத்தை தேசிய பாரம்பரியச் சின்னம் என்று உச்சநீதிமன்றம் அறிவிக்க வேண்டும். அதேபோல இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகமும் அறிவிக்க உத்தரவிட வேண்டும். கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகளை மதித்து, இந்தப் பாலத்தை தேசிய பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க வேண்டும்.
3 கிலோமீட்டர் கொண்ட இந்தப் பாலத்தை ராமர் கட்டினார் என்று கோடிக்கணக்கான இந்துக்களும் நம்புகிறார்கள். வானரப் படையின் உதவியால் கட்டப்பட்டதாக கூறப்படும் இந்தப் பாலத்தின் வழியாகத்தான் ராமர் இலங்கைக்குச் சென்று சீதையை மீட்டார் என்ற இந்துக்களின் நம்பிக்கையை புறக்கணிக்கக் கூடாது என்று சுவாமி தெரிவித்துள்ளார்.
ராமர் பாலம் தொடர்பான முக்கிய வழக்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம்தான் விசாரணைக்கு வருகிறது என்பதால் இந்த மனுவை அவசர மனுவாக கருதி விசாரிக்க வேண்டும் எனவும் சுவாமி கோரியுள்ளார்.