கூட்டணி என்ற பெயரில் கூத்தாட்சி: அதிமுக
வாழப்பாடி: தமிழகத்தில் கூட்டணி என்ற பெயரில் முரண்பட்டவர்கள் ஒன்று கூடி கூத்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என அதிமுக மாஜி அமைச்சர் செல்வகணபதி கூறினார்.
ஜெயலலிதாவின் முதலாவது ஆட்சியில் 'செல்வாக்கு' மிக்க அமைச்சராக இருந்தவர் செல்வ கணபதி. சேலத்தில் பலம் மிக்க தலைவர்களில் இவரும் ஒருவர். சேலம் மாவட்டம் வாழப்பாடியில் அதிமுக தொடக்க விழா பொதுக் கூட்டத்தில் செல்வகணபதி பேசினார்.
அவர் பேசுகையில், தமிழகத்தில் விலைவாசி உயர்வும், வன்முறையும் தாண்டவம் ஆடுகிறது. ஏழைகள் நிம்மதியாக வாழ முடியவில்லை. காரணம் விலைவாசி உயர்வு.
முன்பு ஒரு இரண்டு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு 500 ரூபாயில் மளிகை சாமான்களை வாங்கி விடலாம். ஆனால் இன்று அதே கும்பத்திற்கு மளிகைப் பொருட்களை வாங்க 1000 ரூபாய் தேவைப்படுகிறது. இதை மறுக்க முதல்வர் கருணாநிதி தயாரா.
அது மட்டுமல்லாது, நாட்டில் எங்கு பார்த்தாலும் வன்முறை தாண்டவமாடுகிறது. எதிர்கட்சியினர் மீது வேண்டும் என்றே தாக்குதல் நடத்துகின்றனர்.
மாவட்ட அரசு மருத்துவ மனை முதல் ஆரம்ப சுகாதார நிலையம் வரை ஏழைகளை காப்பாற்ற யாரும் இல்லை. பல மருத்துவமனைகளில் மருந்துக்கள் இல்லை என்ற நிலை தான் உள்ளது.
தமிழகத்தில் முரண்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தும் கூத்து இங்கு மட்டும் நடக்கிறது. உலகத்தில் வேறு எங்கும் இதே போன்ற கூத்து நடக்காது.
சேது சமுத்திர திட்டத்தால் கிடைக்கும் நன்மைகளை விட தீமைகளே அதிகம். சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தினால் கடல் வாழ் உயிரினங்கள் அழிந்து விடும் என்றார்.












Click it and Unblock the Notifications