நடுக் கடலில் நான்கு யாழ் தமிழர்கள் கைது: புலிகளா?
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே நடுக் கடலில் பிளாஸ்டிக் படகில் வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான்கு தமிழர்களை கடலோரக் காவல் படையினர் பிடித்துள்ளனர். அவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களா என்று விசாரணை நடந்து வருகிறது.
ராமேஸ்வரம் கடல் பகுதியில் கடலோரக் காவல் படையினர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பிளாஸ்டிக் படகு ஒன்றில் நான்கு பேர் விரைந்து சென்று கொண்டிருந்தனர்.
இதையடுத்து அவர்களை கடலோரக் காவல் படையினர் மடக்கிப் பிடித்தனர். நால்வரும் அகதிகளாக இருக்கலாம் என முதலில் சந்தேகிக்கப்பட்டது. ஆனால் விசாரணையில் அவர்கள் அகதிகள் இல்லை என்று தெரிய வந்தது.
பின்னர் அவர்களை ராமேஸ்வரம் கொண்டு வந்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், அனைவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
குகணேஸ்வரன், இளையராஜா, காந்தீபன் உள்ளிட்ட அந்த நான்கு பேரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களா என்பது குறித்து கியூ பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.