தமிழகத்திற்கு நெய்யார் நீர்-கேரளா ஒப்புதல்!
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் நெய்யார் அணையிலிருந்து தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விட கேரள அரசு முடிவு செய்துள்ளது. முதலில் தண்ணீர் தர மறுத்து வந்த கேரளா, தற்போது மழை பெய்து வருவதால் உபரி நீரை தமிழகத்திற்குத் திறந்து விட தீர்மானித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகாவில் உள்ள விவசாய நிலங்களுக்கு கேரள மாநிலம் நெய்யார் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக இரு மாநிலங்களுக்கும் இடையே ஒப்பந்தம் உள்ளது. ஆனால் ஒப்பந்தத்தை கேரள அரசு வழக்கம் போல முறையாக மதிப்பதில்லை.
கடந்த 2004ம் ஆண்டு வரை அவ்வப்போது தண்ணீர் கொடுத்து வந்த கேரளா, அதன் பின்னர் தண்ணீர் திறந்து விடுவதை முழுமையாக நிறுத்தி விட்டது.
இதையடுத்து இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட வேண்டும், விளவங்கோடு தாலுகாவில் வாடிக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தைக் காக்க உதவ வேண்டும் என்று கோரி தமிழக அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்துத.
இந்த நிலையில், தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விட தற்போது கேரள அரசு முன்வந்துள்ளது. இதுகுறித்து கேரள முதல்வர் அச்சுதானந்தன் திருவனந்தபுரத்தில் இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இந்த விவகாரம் குறித்து கவனிக்குமாறு நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பிரேமச்சந்திரனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இரு மாநிலங்களுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் கீழ் தண்ணீர் திறந்து விடப்படும்.
திறந்து விடப்படும் தண்ணீருக்கு கட்டணம் பெறுவது தொடர்பாக, ஏற்கனவே சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானித்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அச்சுதானந்தன்.
நெய்யார் நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடுவது குறித்து தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என கேரள சட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நீருக்கு உரிய கட்டணத்தை அவ்வப்போது நிர்ணயித்துக் கொள்ளலாம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மூன்று ஆண்டுகளாக தண்ணீரே தராமல் ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டிருந்தது கேரளா.
ஆனால் பாலக்காடு ரயில் கோட்ட விவகாரத்தை மட்டும் படு பயங்கரமாக கிளப்பி, மதுரை கோட்டத்தில் இருந்து பொள்ளாச்சியைப் பறித்துக் கொண்டுதான் விட்டார்கள். இந் நிலையில் நெய்யார் அணைக்கு தற்போது மழை காரணமாக அதிக தண்ணீர் வருவதால் தண்ணீர் திறந்து விடுவதாக அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications