பெரும்பான்மை இல்லாததால் பெரும் தொல்லை: பிரதமர்
டெல்லி: பெரும்பான்மை பலம் இல்லாததால் கூட்டணிக் கட்சிகளால் நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இதனால் அரசை சமூகமாக நடத்திச் செல்வதில் பெரும் இடையூறு ஏற்படுகிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் மீண்டும் கூட்டணிக் கட்சிகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார்.
அணு சக்தி ஒப்பந்தத்திற்கு இடதுசாரிகள் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அதிருப்தி அடைந்த மன்மோகன் சிங், தான் பதவி விலக விரும்புவதாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் கருத்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
மேலும், கூட்டணிக் கட்சிகள் தனது காலை வாரி விட்டு விட்டதாகவும், சுமூகமாக அரசை நடத்த முடியவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று மீண்டும் கூட்டணிக் கட்சிகள் குறித்த அதிருப்தியை பிரதமர் வெளியிட்டுள்ளார். மெக்கின்சே என்கிற சர்வதேச கன்சல்டன்சி நிறுவன உறுப்பினர்கள் கூட்டத்தில் பிரதமர் பேசினார்.
தனது பேச்சின்போது, இது போட்டி அரசியல் மிகுந்து விட்ட காலம். இதனால் நாட்டுக்கு ஆபத்து ஏற்படும். அதிலும் சிறுபான்மை பலத்துடன் ஆட்சியை நடத்துவது என்பது மிகவும் கடினமானது. நாம் நினைத்ததை, நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு தீர்மானிப்பதை நிறைவேற்றுவது என்பது இயலாததாகி விடுகிறது.
பல கட்சிகளிடம் தொலைநோக்குப் பார்வை இல்லை. நாட்டுக்கு எது நல்லது என்பதை தீர்மானிக்க அவர்களால் முடிவதில்லை. இதனால் பல நல்ல திட்டங்களை கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டு விடுகிறது.
இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நாடு. 9 சதவீத வளர்ச்சி விகிதத்தை நாம் எட்டியாக வேண்டும். ஆனால் அந்த வேகத்திற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் பல விஷயங்கள் நடக்கின்றன என்பதை மறுக்க முடியாது.
இளைஞர்கள் நிறைந்த நாடு இந்தியா. இன்னும் சில காலத்திற்கு இது நீடிக்கும். இப்படிட்ட சக்தியை வைத்திருக்கும் நாம் அதை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி வளர்ச்சி அடைய முயல வேண்டும் என்றார் பிரதமர்.
கூட்டணிக் கட்சிகளின் போக்கு குறித்தும், பெரும்பான்மை பலம் இல்லாததால் ஏற்படும் அவஸ்தைகள் குறித்தும் பிரதமர் அதிருப்தி வெளியிட்டிருப்பது டெல்லி அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications