சட்டசபையிலிருந்து வெளிநடப்புச் செய்த புதுவை அமைச்சர்
புதுச்சேரி: தனக்கு உரிய மரியாதையை அளிக்க அரசு தவறி விட்டதாக கூறி புதுச்சேரி சட்டசபையிலிருந்து சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி வெளிநடப்புச் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அரசுக்கு ஆதரவு தரும் பாமக மற்றும் அதிமுக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்து பரபரப்பைக் கூட்டினர்.
புதுவை சட்டசபை மழைக் காலக் கூட்டம் இன்று நடந்தது. அவை கூடியதும், சபாநாயகர் ராதாகிருஷ்ணன் இரங்கல் தீர்மானங்களை எடுத்தார். அப்போது அதிமுக, பாமக, புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் எழுந்து, சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, புதுச்சேரியின் பெயரை மீண்டும் பாண்டிச்சேரி என்றே மாற்றுவது, ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் இலவச அரிசி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பினர்.
ஆனால் யாருடைய கோரிக்கையையும் சபாநாயகர் ஏற்கவில்லை. மாறாக, முதல்வர் ரங்கசாமியை, வாட் சட்டம் தொடர்பான அறிக்கையை தாக்க் செய்யுமாறு அழைத்தார்.
இதையடுத்து அதிருப்தி அடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கை முன்பு கூடி ஆவேசமாக கோஷமிட்டனர். கடுமையாக வாதிட்டனர். இதனால் அவையில் பெரும் குழப்பம் நிலவியது. அனைவரும் இருக்கைக்குப் போகுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். ஆனால் யாரும் கேட்பதாக தெரியவில்லை.
இந்த நிலையில், கையில் தட்டிகளுடன் வந்த அதிமுக மற்றும் பாமக உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர். புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்யாமல் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அமைச்சர் வெளிநடப்பு:
சபையில் அமைதி திரும்பிய நிலையில் அடுத்த பரபரப்பாக சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி திடீரென அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தார்.
வெளிநடப்புச் செய்த அவர் நேராக தனது அறைக்குத் திரும்பினார். அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நான் தலித் சமூகத்தைச் சேர்ந்தவன். எனவே எனக்குரிய மரியாதையை தராமல் புறக்கணித்து வருகிறார்கள்.
இப்ேபாது சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ள மல்லாடி கிருஷ்ணா ராவை விட நான் சீனியர். ஏற்கனவே அமைச்சராக இருந்திருக்கிறேன். ஆனால் எனக்கு அமைச்சரவையில் 6வது இடம்தான் தந்திருக்கிறார்கள். மல்லாடி கிருஷ்ணா ராவை விட எனக்கு ஒரு இடம் குறைத்துக் கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து நான் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கும், கட்சித் தலைவருக்கும் கடிதம் எழுதி கூறியிருந்தேன். ஆனால் இதுவரை என்னை மதிக்கும் ஒரு நடவடிக்கையையும் அவர்கள் எடுக்கவில்லை.
கட்சிக் கட்டுப்பாட்டுக்கு மதிப்பு கொடுத்துத்தான் இன்று சட்டசபைக்கு வந்தேன். ஆனால் என்னால் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது. அந்த மன நிலையில் நான் இல்லை. ஆனால் நான் வெளிநடப்பு செய்யவில்லை என்றார் கந்தசாமி.
அமைச்சரே வெளிநடப்பு செய்த விவகாரம் புதுவையில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இந்த அமளிகளுக்கு மத்தியில், வாட் சட்டத் திருத்தத்திற்கு சபையில் ஒப்புதல் தரப்பட்டது. இதையடுத்து சபையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
இப்படியாக மழைக்காலக் கூட்டத் தொடர் 10 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.












Click it and Unblock the Notifications