அப்துல் கலாமுக்கு கிங் சார்லஸ் விருது
லண்டன்: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு லண்டனில் உள்ள ராயல் சொசைட்டி நிறுவனம், இரண்டாம் சார்லஸ் மன்னர் பதக்கம் வழங்கி கெளரவித்துள்ளது.
பிரிட்டனை ஆண்ட 2ம் சார்லஸ் மன்னர் ஆட்சிக் காலத்தில் அறிவியலை வளர்க்க உருவாக்கப்பட்ட நிறுவனம்தான் ராயல் சொசைட்டி. புகழ் பெற்ற விஞ்ஞானிகள் இணைந்து உருவாக்கியது இது.
தற்போது இதில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் 60 பேர் உட்பட உலகின் தலை சிறந்த விஞ்ஞானிகள் 1,000க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த நிறுவனம் தோன்றக் காரணமாக இருந்த 2ம் சார்லஸ் மன்னர் பெயரில் சிறந்த விஞ்ஞானிகளுக்கு விருது வழங்க கடந்த 1997ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது.
தற்போது இந்த விருது, அப்துல் கலாமுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக லண்டனில் நடந்த நிகழ்ச்சியில், கலாமுக்கு இந்த விருதை ராயல் சொசைட்டியின் தலைவர் மார்ட்டின் ரீஸ், கவழங்கி கவுரவித்தார்.
இந்த விருதைப் பெறும் 2வது நபர் அப்துல் கலாம். கடந்த 1998ம் ஆண்டு ஜப்பான் மன்னர் அகிஹிடோவுக்கு முதலாவது விருது வழங்கப்பட்டது.
மார்ட்டின் ரீஸ் பேசுகையில், இந்தியாவில் அறிவியல் துறையை சிறந்த முறையில் வழி நடத்தி சென்றதற்காகவும், அவருடைய இந்தியா 2020 என்ற தொலைநோக்குப் பார்வைக்காகவும் இந்த விருது வழங்கப்படுவதாக கூறினார்.
அப்துல் கலாம் பேசுகையில், இது இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் கிடைத்த கவுரவம். சமுதாய நோக்கோடு அறிவியலை வழிநடத்திச் செல்வது விஞ்ஞானிகளின் கடமையாகும் என்றார்.












Click it and Unblock the Notifications