7 வீரர்களுடன் விண்ணில் பாய்ந்தது டிஸ்கவரி
கேப் கேனவரல்: அமெரிக்க விண்வெளி ஓடம் டிஸ்கவரி நேற்று இரவு விண்ணில் செலுத்தப்பட்டது.
விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் சில கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக டிஸ்கவரியை அனுப்ப நாசா தீர்மானித்தது. ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான ஆய்வகங்களை அமைக்கவே இந்த புதிய பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்காக டிஸ்கவரியை நேற்று விண்ணுக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் வானிலை மோசமாக இருந்ததால், திட்டமிட்டபடி டிஸ்கவரி செலுத்தப்படுமா என்ற சந்தேகம் நிலவியது. இருப்பினும் திட்டமிட்டபடி டிஸ்கவரி செலுத்தப்படும் என நாசா அறிவித்திருந்தது.
அதன்படி நேற்று இரவு 21.08 மணிக்கு கேப் கேனவரல் விண்வெளி மையத்திலிருந்து டிஸ்கவரி விண்ணில் செலுத்தப்பட்டது. ஏவப்பட்ட 8.5 நிமிடங்களில் டிஸ்கவரி விண்வெளி சுற்றுப் பாதையை எட்டியது.
டிஸ்கவரியை எந்தப் பிரச்சினையும் இன்றி ஏவியதால் நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த விண்கலத்தில் முன்னாள் விமானப்படை கர்னர் பமீலா மெல்ராய் (வயது 46) தலைமையிலான 7 பேர் கொண்ட குழு சென்றுள்ளது. இவர்கள் 10 நாட்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் அங்கு தங்கியிருப்பார்கள்.
இந்த விண் பயணத்தின்போது, ஐந்து முறை விண் நடை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை டிஸ்கவரி மீண்டும் பூமிக்குத் திரும்புகிறது.












Click it and Unblock the Notifications