கூட்டணியில் ஜெ இருக்கிறாரா?-பதில் சொல்ல நாயுடு மறுப்பு!
வேலூர்: மூன்றாவது அணியில் அதிமுக உள்ளதா என்ற கேள்விக்கு சந்திரபாபு நாயுடு பதிலளிக்க மறுத்துவிட்டார்.
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் மூன்றாவது அணியின் முக்கியத் தலைவருமான சந்திரபாபு நாயுடு இன்று ஆந்திர மாநிலம் சித்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
காலை ஹெலிகாப்டர் மூலம் வேலூர் வந்த அவர், அங்குள்ள ஸ்ரீபுரம் தங்ககோவிலுக்கு சென்றார். ஹெலிகாப்டர் தளத்தில் நாயுடுவை தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் அணியின் முக்கிய பிரமுகரான நடிகை ரோஜா வரவேற்றார்.
பின்னர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார் நாயுடு. தரிசனத்தை முடித்துக் கொண்டு கிளம்பிய நாயுடுவிடம் நிருபர்கள் 3வது அணியில் அதிமுக இருக்கிறதா என்று கேட்டனர்.
அதற்கு பதிலளித்த சந்திரபாபு நாயுடு இங்கு அரசியல் வேண்டாம். இது அரசியல் பேசும் இடம் அல்ல. வேலூர் நாராயணி சக்திபீடம் சிறந்த ஆன்மீக தலம் என்று தெரிந்து வைத்திருந்தேன். அதுபற்றி அதிகமாக எனக்கு தெரியாது. இங்கு வந்த பிறகுதான் உலகின் சிறந்த ஆன்மீக தளங்களில் இதுவும் ஒன்றாக திகழ்கிறது. என்பதை உணர்ந்து கொண்டேன்.
இங்கு வந்த பிறகுதான் எனக்கு அமைதியும் ஆனந்தமும் கிடைத்தது என்றார்.
மாலையில் வேலூர் வி.ஐ.டி. கல்லூரி-பல்கலைக்கழகம் மற்றும் சி.எம்.சி. மருத்துவமனைகளில் நடைபெறும் நிகழ்ச்சியில் நாயுடு பங்கேற்கிறார்.