டோணிக்கு டொயோடோ கார் - ஜார்க்கண்ட் அரசு வழங்கியது
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில அரசின் சார்பில் இந்திய கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் டோணிக்கு, டொயோடோ காரை அம்மாநில முதல்வர் மது கோடா பரிசளித்தார்.
20-20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றபோது கிரிக்கெட் வாரியம் உள்ளிட்ட பலரும் பரிசுகளை அறிவித்து இந்திய வீரர்களை பண மழையால் குளிப்பாட்டினர்.
கேப்டன் டோணி, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். அவருக்கு அம்மாநில அரசு ஒரு ஆச்சரியமான பரிசைத் தரப் போவதாக அம்மாநில முதல்வர் மது கோடா தெரிவித்திருந்தார். அது என்ன பரிசு என்பது பரிசு வழங்கப்படும்போதுதான் தெரியும் என்றும் கூறியிருந்தார்.
மேலும் டோணிக்கு ஜார்க்கண்ட ரத்னா விருதும் வழங்கப்படும் எனவும் அறிவித்தார். ஆனால் டோணிக்கு ஜார்க்கண்ட் ரத்னா விருது வழங்க மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அந்த விருதை ஜார்க்கண்ட் விளையாட்டு ரத்னா விருது என்று மாற்றி விட்டனர்.
இந்த நிலையில், நேற்று தலைநகர் ராஞ்சியில் முதல்வர் மது கோடாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் டோணிக்குப் பாராட்டு விழா நடந்தது. அப்போது ஆச்சரியப் பரிசாக டொயோடோ கரோலா காரை மது கோடா வழங்கினார். மேலும் ரூ. 5 லட்சம் பரிசுக்கான காசோலையையும் அவர் வழங்கினார்.
காரைப் பெற்றுக் கொண்ட டோணி, பரிசை முதல்வர் நிவாரண நிதிக்கு அளித்து விட்டார்.
பின்னர் கோடா பேசுகையில், நவம்பர் 15ம் தேதி ஜார்க்கண்ட் மாநிலம் உருவான 8வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ஜார்க்கண்ட் விளையாட்டு ரத்னா விருது டோணிக்கு வழங்கப்படும்.
டோணி நமது மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் பெருமைப்படுகிறோம். சர்வதேச வரைபடத்தில் ஜார்க்கண்ட் இடம் பெற டோணி முக்கிய காரணமாக அமைந்துள்ளார் என்றார் கோடா.