குழந்தையின் இதயத்தில் சிக்கிய லாக்கெட்!
டெல்லி: டாக்டர்களின் கவனக்குறைவால், 9 மாதக் குழந்தைக்கு நுரையீரல் அறுவைச் சிகிச்சை செய்தபோது அந்தக் குழந்தையின் கழுத்தில் கிடந்த லாக்கெட் தவறுதலாக இதயத்திற்குள் சிக்கிக் கொண்டதாக டெல்லியில் சர்ச்சை எழுந்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்தவர் சுரேந்தர் குமார் ஜா. இவருக்கு 9 வயதில் உதய் என்ற குழந்தை உள்ளது. இவனுக்கு உடல் நலம் சரியில்லாததால் கடந்த 19ம் தேதி கஸ்தூரிபா காந்தி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.
அங்கு சிறுவனைப் பரிசோதித்த டாக்டர்கள் 22ம் தேதி அரசு லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். அங்கு சிறுவனைப் பரிசோதித்த டாக்டர்கள், சிறுவனின் நுரையீரலில் நிறைய நீரும், சலமும் சேர்ந்துள்ளதாக கூறி அவற்றை நீக்க ஆபரேஷன் செய்ய முடிவெடுத்தனர்.
இதையடுத்து அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் சிறுவன் தொடர்ந்து அழுது கொண்டே இருந்தான். இதையடுத்து டாக்டர்கள் அவனுக்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தனர்.
அப்போது சிறுவனின் இதயத்தில், அவன் அணிந்திருந்த கழுத்து லாக்கெட் சிக்கியிருப்பது தெரிய வந்தது. ஆனால் சிறுவனின் இதயத்தில் லாக்கெட் சிக்கவில்லை என்றும், எக்ஸ்ரே எடுத்தபோது வேறு ஏதோ ஒரு பொருள் லாக்கெட் போல பிரதிபலித்துள்ளது என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து குழந்தைகள் நலப் பிரிவு தலைவர் டாக்டர் பி.ஆர்.சேத்தி கூறுகையில், எக்ஸ்ரேவை சிறுவனின் பெற்றோர் தவறுதலாகப் புரிந்து கொண்டுள்ளனர். இதயத்திற்குள் லாக்கெட் போன்ற பெரிய பொருட்கள் சிக்கிக் கொள்ள வாய்ப்பே இல்லை. எக்ஸ்ரே எடுத்தபோது, வேறு ஏதோ ஒரு பொருள் எக்ஸ்ரே பிலிமில் பிரதிபலித்துள்ளது. அதுதான் லாக்கெட் போல தெரிகிறது.
நுரையீரல் அறுவைச் சிகிச்சைக்காக கீ ஹோல் முறையைத்தான் நாங்கள் பின்பற்றினோம். எனவே அந்த சிறு துளை வழியாக சிறுவனின் இதயத்திற்குள் லாக்கெட் போய் சிக்கிக் கொண்டதாக கூறுவது சாத்தியமில்லாதது என்றார்.
இந்த சர்ச்சை டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரிக்க இந்திய மருத்துவ சங்கம், ஒரு குழுவை அனுப்பி விசாரணை மேற்கொண்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து டெல்லி மநில சுகாதாரத் துறை அமைச்சர் யோகானந்த் சாஸ்திரி கூறுகையில், டாக்டர்கள் மீது தவறு இருப்பதாக தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications