கோவை: கடைசி 5 பேருக்கு தண்டனை அறிவிப்பு
கோவை: கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் எஞ்சிய 5 பேருக்கும் இன்று தண்டனை அறிவிக்கப்பட்டது. இத்துடன் கடந்த ஒன்றரை மாதங்களாக அறிவிக்கப்பட்டு வந்த தண்டனை விவரம் முடிவுக்கு வந்துள்ளது.
கோவை தொடர் குண்டுவெடிப்பில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 158 பேருக்கு பல கட்டங்களாக தண்டனை விவரத்தை தனிப்படை நீதிபதி உத்திராபதி அறிவித்து வந்தார்.
நேற்று வரை 153 பேருக்கு தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டிருந்தது. எஞ்சிய 5 பேருக்கு இன்று தண்டனை விவரம் வெளியிடப்பட்டது.
அதன்படி உஜிபுல் ரஹ்மான், முகம்மது அலிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. முஜிபுர் ரஹ்மானுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
பக்ருதின் அலி அகமது, சாகுல் அமீது ஆகியோருக்கு தலா 13 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை அறிவிக்கப்படுவது முடிவுக்கு வந்தது. இந்த வழக்கில் மொத்தம் 43 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் அல் உம்மா தலைவர் பாஷாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு இந்த வழக்கில் தண்டனை கிடைத்துள்ளது.
மகன் சித்திக் அலி, தம்பி நவாப் கான், மைத்துனர் சிக்கந்தர் ஆகியோர் தண்டனை பெற்ற மற்றவர்கள் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் அப்ரூவராக மாறிய மைசூரைச் சேர்ந்த வெடிபொருள் வியாபாரி ரியாசுல் ரஹ்மான் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.
இவ்வழக்கில் மொத்தம் 88 பேர் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மதானி உள்ளிட்ட 8 பேர் நிரபராதிகள் என அறிவிக்கப்படனர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றவர்கள் தண்டனைக் காலத்தை ஏற்கனவே சிறையில் கழித்து விட்டதால் விடுவிக்கப்பட்டவர்கள்.