குண்டுவெடிப்பில் 15 பாக். ராணுவ வீரர்கள் பலி
மின்கோரா (பாகிஸ்தான்): பாகிஸ்தானில் ராணுவ வீரர்கள் சென்ற வாகன வரிசையில் குண்டு வெடித்ததில் 15 பேர் உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தீவிரவாதிகள் ஆதிக்கம் அதிகம் உள்ள வட மேற்கு மாகாணத்தில் உள்ள ஸ்வாட் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பாகிஸ்தானின் வடக்குப் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் தீவிரவாதிகளை ஒடுக்க நேற்று முன்தினம்தான் 2000 ராணுவ வீரர்களை அந்நாட்டு அரசு அனுப்பி வைத்தது.
இந்த நிலையில் நேற்று ஸ்வாட் மாவட்டத்தில் சாலையோரம் லாரியில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்டது. இதில் சிக்கி வாகனங்களில் சென்று கொண்டிருந்த 15 வீரர்கள் கொல்லப்பட்டனர். 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து மறைந்திருந்த தீவிரவாதிகள், ராணுவத்தினர் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். ராணுவத்தினரும் பதிலுக்கு திருப்பித் தாக்கினர்.
பாகிஸ்தானின் வட மேற்கு எல்லைப்புற மாகாணம் முழுவதும் கிட்டத்தட்ட தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு தலிபான் தீவிரவாதிகள், மிகக் கடுமையான விதிமுறைகளை விதித்து அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என மக்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
பழங்குடியினர் அதிகம் வசிக்கும் இப்பகுதியில், அல் கொய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகள் அதிகளவில் நடமாடுகின்றனர். ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பி வரும் தீவிரவாதிகளுக்கு இந்தப் பகுதிதான் அடைக்கலமாக உள்ளது. பின் லேடனே இங்குள்ள ஒரு மறைவிடத்தில்தான் பதுங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இங்குள்ள தீவிரவாதிகளை விரட்டியடிக்க பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில மாதங்களாக கடுமையான நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தாக்குதலை மேலும் தீவிரமாக்கவே 2000 ராணுவ வீரர்கள் புதிதாக அனுப்பப்பட்டனர்.












Click it and Unblock the Notifications