அமைச்சர் பதவி மீது ஆசை இல்லை - கனிமொழி
திருச்சி: எனக்கு அமைச்சர் பதவி மீது ஆசை இல்லை என்று முதல்வர் கருணாநிதியின் மகளும், திமுக எம்.பியுமான கனிமொழி கருணாநிதி கூறியுள்ளார்.
திருச்சியில், இந்திய தொழிலக சம்மேளனத்தின் மகளிர் மேம்பாடு குறித்த கருத்தரங்கம் நடந்தது. இதில் கனிமொழி கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கனிமொழி பேசுகையில், எனக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்று சிலர் கணிப்பதை நான் நம்பவில்லை. எனக்கு ஜோதிடத்தின் மீது நம்பிக்கை கிடையாது. எனக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா, கிடைக்காதா என்பது குறித்து தெரியாது.
எப்போது நான் அமைச்சர் ஆவேன் என்று கூற முடியாது. அமைச்சர் பதவி மீது எனக்கு ஆசை இல்லை.
இப்போது நான் உள்ள நிலையிலேயே மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன். எனவே அடுத்து எனன என்ற சிந்தனை என்னிடம் இல்லை. அமைச்சர் பதவி கிடைக்குமா என்ற ஆரூடத்திற்குள் போகவும் நான் விரும்பவில்லை.
பெண்களுக்கான உரிமைகள் குறித்து பெண்களிடம் மட்டும் சொல்லிக் கொண்டிருக்காமல் அதுகுறித்து ஆண்களிடமும் பிரசாரம் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. அப்போதுதான் பெண்களுக்கான உரிமைகள், சமத்துவம் குறித்து அவர்களுக்கும் புரியும்.
உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களால் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் ஊராட்சித் தலைவர்களுக்குப் பின்னால் அவர்களது கணவர்களும், சகோதரர்களும்தான் பினாமிகள் போல செயல்படுகிறார்கள்.
ஆனால் அந்த நிலை கொஞ்சம் மாறியுள்ளதாக கருதுகிறேன். தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மேலும் சிறப்புடன் திறம்பட செயல்படுவார்கள் என நம்புகிறேன்.
பெண்களுக்கு சட்டசபைகளிலும், நாடாளுமன்றத்திலும் 33 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும் சட்டம் நிறைவேற நான் போராடுவேன். இதற்காக தனி அமைப்பை ஏற்படுத்திப் போராடவும் நான் யோசித்து வருகிறேன். இது கிடைக்கும் வரை போராடுவேன் என்றார் கனிமொழி.