மனைவி, குழந்தைகளை கொன்று தொழிலாளி தற்கொலை
கூடலூர்: கடன் தொல்லை காரணமாக கூலித் தொழிலாளி ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை வெட்டிக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
நீலகரி மாவட்டம், கூடலூர் அருகேயுள்ள சுல்தான்பத்தேரி நாய்கடவு பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (41). கூலித் தொழிலாளி. இவருக்கு சுதா (38) என்ற மனைவியும், சிவபிரசாத் (15), அருண்பிரசாத் (13), அமுல்பிரசாத்(12) என்ற 3 மகன்களும் இருந்தனர்.
சிவக்குமாரின் வீடு சம்பவத்தன்று வெகுநேரமாக திறக்காததால், அப்பகுதி மக்கள் சந்தேகம் அடைந்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் கதவை உடைத்து சென்று பார்த்தபோது, சிவக்குமார் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.
அவரின் மனைவி சுதாவின் தலை தனியாக துண்டிக்கப்பட்டும், மகன்கள் மூவரும் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.
மனைவி மற்றும் மகன்களுக்கு விஷத்தை கொடுத்து அவர்களை கொன்று விட்டு, சிவக்குமார் தானும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.
கடன் தொல்லை காரணமாக சிவக்குமார் இப்படி நடந்து கொண்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
சிவக்குமாரின் மனைவி சுதா கன்னடத்தில் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில், எங்கள் சாவுக்கு யாரும் காரணம் கிடையாது. மன உளைச்சலே காரணமாகும். எங்கள் வீட்டின் பீரோவில் உள்ள நகைகள் மற்றும் பணங்களை எடுத்து எங்களுடைய கடன்களை அடைத்து விடுங்கள் என்று எழுதி வைத்துள்ளார்.
குடும்பமே இறந்த சம்பவம் கூடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.