ஆந்திராவில் தண்டவாளம் மூழ்கியது-ரயில்கள் ரத்து, பல சென்னை ரயில்கள் தாமதம்
சென்னை: ஆந்திராவில் கன மழையால் நெல்லூர்-கூடூர் இடையே தண்டவாளம் நீரில் மூழ்கிவிட்டதால் சென்னை-விஜயவாடா இடையிலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வட மாநிலங்களில் இருந்து ஆந்திரா வழியாக சென்னை வரும் ரயில்கள் மிகவும் காலதாமதமாக வந்து கொண்டுள்ளன.
புயல் சின்னத்தில் ஆந்திரத்திலும் கன மழை பெய்து வருகிறது. இதில் நெல்லூர்-கூடூர் இடையே தண்டவாளம் நீரில் மூழ்கியது.
இதையடுத்து சென்னை-விஜயவாடா இடையிலான 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விஜயவாடாவில் இருந்து சென்னைக்கு காலை 7 மணிக்கு புறப்படும் ஜன சதாப்தி ரயிலும், பகல் 2 மணிக்கு கிளம்பும் பினாகினி எக்ஸ்பிரஸ் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அது போல சென்னை சென்ட்ரலில் இருந்து பகல் 2.30 மணிக்குக் கிளம்பும் விஜயவாடா ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலும், மறு மார்க்கத்தில் சென்னையிலிருந்து புறப்படபம் பினாகினி எக்ஸ்பிரஸ் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் ஆந்திரா வழியாக தமிழகம் வரும் 5 ரயில்களும் தாமதமாக வந்து கொண்டிருக்கின்றன. டெல்லியில் இருந்து காலை 6.15 மணிக்கு சென்னை வந்து சேர வேண்டிய ஜி.டி.எக்ஸ்பிரஸ், 7.10 மணிக்கு வர வேண்டிய தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், 7.10 மணிக்கு வரவேண்டிய சார்மினார் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் 3 மணி நேரம் தாமதமாக வந்து கொண்டுள்ளன.
அதேபோல பிலாஸ்பூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் 4 மணி நேர தாமதாக வந்து கொண்டுள்ளது. ஜம்முதாவி-சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலும் தாமதாக வந்து கொண்டிருக்கிறது.
நெல்லூர்-சென்னை இடையிலான இரண்டு வழித் தடங்களில் ஒரு வழித் தடத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுவிட்டது. இன்னொரு வழித் தடத்தில் தான் ரயில்கள் மிக மெதுவான வேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் தான் மேலே குறிப்பிட்ட அனைத்து ரயில்களும் தாமதமாக வந்து கொண்டுள்ளன.