நைஜீரியாவில் கடத்தப்பட்ட 3 தமிழர்களும் விடுதலை
திருநெல்வேலி: நைஜீரியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 3 தமிழர்கள் உள்ளிட்ட 6 பேரும் இன்று முற்பகல் 11 மணியளவில் விடுதலை செய்யப்பட்டனர். 3 தமிழர்களும் பத்திரமாக இருப்பதாகவும், நாளை அவர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தைச் சேர்ந்தவர்கள் அஜீத் காமராஜ் (33), வினோத (31), மோகன்தாஸ் (30). மூன்று பேரும் நைஜீரியாவில் உள்ள இத்தாலி நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இந்த மூன்று பேர் உள்பட 6 பேரை கடலில் பணி செய்து கொண்டிருந்தபோது கடந்த 26ம் தேதி தீவிரவாதக் கும்பல் ஒன்று கடத்திச் சென்றது. அவர்களில் தமிழர்கள் மூவரைத் தவிர மகாராஷ்டிராவைச் சேர்ந்த இன்னொரு இந்தியரும் அடக்கம். மற்ற இருவரும் போலந்து நாட்டைச் சேர்ந்தவர்கள்.
அவர்களை விடுவிக்க வேண்டுமானால் ரூ. 200 கோடி பணம் தர வேண்டும் என்று அந்த தீவிரவாதக் கும்பல் கோரிக்கை விடுத்தது.
இந்த நிலையில் தமிழர்கள் 3 பேரையும் பத்திரமாக மீட்க வேண்டும் என்று கோரி அவர்களது குடும்பத்தினர் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், முதல்வர் கருணாநிதி, வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவிக்கு மனுக்களை அனுப்பினர்.
இந்தச் சூழ்நிலையில், கடத்தப்பட்ட 3 தமிழர்கள் உள்ளிட்ட 4 இந்தியர்களையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. சம்பந்தப்பட்ட இத்தாலி நிறுவனம், கடத்தல்காரர்களுடன் பேச்சு நடத்தியது. இந்தப் பேச்சுவார்த்தையில் கடத்தப்பட்டவர்களை விடுவிக்க அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
அதன்படி இந்திய நேரப்படி இன்று முற்பகல் 11 மணியளவில் 3 தமிழர்கள் உள்ளிட்ட 6 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
தமிழர்கள் 3 பேரும் பத்திரமாக இருப்பதாகவும், அவர்களுக்கு மருத்துவரப் பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாகவும், நாளை அவர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் இத்தாலி நிறுவனம் தெரிவித்துள்ளது.
3 தமிழர்களும் பத்திரமாக மீண்டுள்ளதால் அவர்களது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications