நரேந்திர மோடி முதல்வராக தொடர்வது தேசிய அவமானம்-தமுமுக
சென்னை: நரேந்திர மோடி முதல்வராக தொடர்வது தேசிய அவமானம் என தமுமுக கூறியுள்ளது.
அக் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாஹ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவதற்கும், எண்ணிலடங்கா பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படுவதற்கும், காங்கிரஸ் தலைவர் எஹ்சான் ஜாஃப்ரி துண்டுத் துண்டாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு அவரது வீட்டிலேயே எரிக்கப்பட்டதற்கும்,
பல லட்சக்கணக்கான குடும்பங்கள் அனாதைகளாய் சொந்த நாட்டில் அகதிகளாய் மாறுவதற்கும் காரணமான குஜராத் கலவரத்தை திட்டமிட்டு நடத்தியது நரேந்திர மோடியும் அவரது சகாக்களும் என்பதை தெஹல்கா செய்தி ஊடகம் வீடியோ ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியுள்ளது.
இத்தகைய கொடுங் குற்றத்தைச் செய்த ஒருவர் இந்திய அரசியல் சாசனத்தின் மீது பதவிப் பிரமாணம் எடுத்து ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருப்பதற்கு கடுகளவும் அருகதை இல்லை.
நரேந்திர மோடி செய்த கொடுங் குற்றங்கள் ஆதாரங்களோடு அம்பலமாகிவிட்ட நிலையில் அவர் முதலமைச்சராகத் தொடர்வது ஒரு தேசிய அவமானம்.
உச்சநீதிமன்றம் இப்பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு குஜராத் முதல்வர் நரேந்திர மோடியையும் அவரது சகாக்களையும் கைது செய்ய உத்தரவிட வேண்டும்.
விசாரணை ஆணையங்களை அமைப்பது போன்ற நடவடிக்கைகள் விழலுக்கு இறைத்த நீராக அமையும். எனவே கொலைக் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச தண்டனையே பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நீதியாக இருக்க முடியும்.
கொடுங்குற்றங்களைச் செய்துள்ள நரேந்திர மோடி இனி தேர்தலில் போட்டியிடவே முடியாதபடி தேர்தல் ஆணையம் தடைவிதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
அராஜகங்கள் அப்பட்டமாக நிரூபிக்கப்பட்டுள்ள மோடி மீது நீதி அமைப்பு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை தேசமே எதிர்பார்க்கிறது.
உச்சநீதிமன்றம் இதில் உடனடியாகத் தலையிட்டு நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு மெமோரியல் ஹால் முன்பாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளது என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications