மதுரையில் கிருஷ்ணசாமியை சந்தித்த கருணாநிதி
மதுரை: முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையையொட்டி பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் இன்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தேசியத்தையும், தெய்வீகத்தையும் தனது இரு கண்களாக பாவித்தவர் முத்துராமலிங்கத் தேவர். அவரது பிறந்த நாளும், மறைவு தினமும் அக்டோபர் 30ம் தேதி ஒரே நாளில் வருவதால் அது குரு பூஜையாக முக்குலத்தோர் சமுதாயத்தினரால் அனுசரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு தேவரின் நூறாவது ஆண்டு ஜெயந்தி விழா என்பதால் இதை தமிழக அரசு, விழாவாக கொண்டாடுகிறது.
தேவர் குரு பூஜை 3 நாள் விழாவாக கொண்டாடப்படும். முதல் நாள் விழா ஆன்மீக விழாவாகவும், 2வது நாள் விழா அரசியல் விழாவாகவும், 3வது நாள் விழா குரு பூஜையாகவும் அனுசரிக்கப்படுகிறது.
இன்று குரு பூஜையையொட்டி பசும்பொன் கிராமத்தில் லட்சக்கணக்கான முக்குலத்தோர் சமுதாயத்தினர் குவிந்துள்ளனர். முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக முதல்வர் கருணாநிதி நேற்று இரவு சென்னையிலிருந்து ரயில் மூலம் மதுரை வந்தார்.
இன்று காலை 10 மணிக்கு அவர் பசும்பொன் கிராமத்திற்கு வருகை தந்தார். அங்கு தேவர் நினைவிடத்தில் அவர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.
பின்னர் நடந்த விழாவில் அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கினார் கருணாநிதி. நூற்றாண்டு விழாக் கட்டடங்களையும் அவர் திறந்து வைத்தார். நூற்றாண்டு மலரையும் அவர் வெளியிட்டார்.
பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
மதுரையில் ...
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவரின் முழு உருவச் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கு பெண்கள் பொங்கல் வைத்து தேவர் குரு பூஜையை கொண்டாடினர்.
இங்கும் பல்வேறு அரசியல் தலைவர்கள், தேவர் சமுதாயப் பிரமுகர்கள் உள்ளிட்டோர் மாலைகள் அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
சென்னையில் ...
சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் அன்பழகன், தா.மோ. அன்பரசன், வெள்ளக்கோவில் சாமிநாதன், மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, முன்னாள் காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், கராத்தே தியாகராஜன், கார்த்தி சிதம்பரம் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
ஆயிரக்கணக்கான பெண்கள் முளைப்பாரிகளை ஏந்தி வந்து தேவர் சிலைக்கு அஞ்சலி செலுத்தினர்.
பசும்பொன் கிராமத்தில் குவிந்துள்ள முக்குலத்தோர் சமுதாயத்தினர் மொட்டை அடித்தும், பொங்கல் வைத்தும், முளைப்பாரி சுமந்து வந்தும் குருபூஜையைக் கொண்டாடி வருகின்றனர்.
குருபூஜையையொட்டி மிக பலத்த பாதுகாப்புக்கு போலீஸார் ஏற்பாடு செய்துள்ளனர். பசும்பொன் கிராமத்தின் எல்லைப் பகுதிகள் அனைத்தும் போலீஸாரால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
பசும்பொன் எல்லைப் பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 5,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணசாமியுடன் கருணாநிதி சந்திப்பு
முன்னதாக ரயில் நிலையத்தில் தொண்டர்களின் வரவேற்பை ஏற்ற முதல்வர் கருணாநிதி, நேராக அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு வேல் கம்புகளால் தாக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியை சந்தித்து அவரிடம் நலம் விசாரித்தார்.
டாக்டர்களிடம் கிருஷ்ணசாமியின் உடல் நலம் குறித்து விசாரித்தார். நன்கு சிகிச்சை அளிக்கும்படியும் அவர்களை வலியுறுத்தினார்.
காவல்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய பின் அங்கிருந்து புறப்பட்டு அரசு விருந்தினர் இல்லத்திற்குச் சென்றார்.
பின்னர் மதுரையில் இருந்து காரில் பசும்பொன் கிளம்பிய கருணாநிதி நிருபர்களிடம் பேசுகையில்,
கிருஷ்ணசாமியை தாக்கியவர்கள் யார் என்பதை கண்டு பிடிக்க போலீசார் துரித நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர். போலீஸ் விசார ணைக்கு பிறகு தான் அவரை தாக்கியவர்கள் யார் என்பது தெரிய வரும் என்றார்.
மாலை 5 மணிக்கு மதுரை சாத்தமங்கலத்தில் கட்டப்பட்டுள்ள தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் மணிமண்டபத் திறப்பு விழாவில் கருணாநிதி பங்கேற்கிறார். பின்னர் விருந்தினர் மாளிகை திரும்பி ஓய்வெடுக்கும் முதல்வர் நாளை காலை திருப்பரங்குன்றம் அருகே உள்ள விளாச்சேரி செல்கிறார்.
அங்கு பரிதிமாற்கலைஞர் வாழ்ந்த இல்லம் நினைவிடமாக மாற்றப்பட்டுள்ளது. அதை நாளை காலை 10 மணிக்கு முதல்வர் திறந்து வைக்கிறார். நாளை மாலை 5 மணிக்கு வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் அருகே அமைக்கப்பட்டுள்ள மருது பாண்டியர் சிலையை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் மு.க.அழகிரி வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
தனது 2 நாள் மதுரை நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நாளை இரவு 11 மணிக்கு முதல்வர் சேலம் புறப்பட்டுச் செல்கிறார். அங்கு சேலம் ரயில்வே கோட்ட தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார்.












Click it and Unblock the Notifications