வெடிபொருள் ஆலையில் தீ: ஒருவர் பலி
கடலூர்: கடலூர் துறைமுகம் பகுதியில் வெடிபொருள் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் வெடிமருந்துகள் வெடித்துச் சிதறின. இதில் ஒருவர் பலியானார். 7 பேர் படுகாயமடைந்தனர்.
துறைமுகம் பகுதியில் தஸ்தகீர் என்பவர் வெடிமருந்து தயாரிக்கவும், வான வேடிக்கைக்கான பட்டாசுகள் தயாரிக்கவும் அனுமதி பெற்று தொழிற்சாலை நடத்தி வந்தார்.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்ததால் அவர் தொழிலை நடத்தாமல் இருந்தார். நேற்று மழை ஓய்ந்ததால் மீண்டும் பணிகள் தொடங்கின.
நேற்று மாலை 8 ஊழியர்கள் வெடிமருந்துகள் மற்றும் வானவேடிக்கைப் பட்டாசுகளைத் தயாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
இதில் வெடிமருந்துகளும், வான வேடிக்கைப் பட்டாசுகளும் வெடித்துச் சிதறின. இந்த சத்தம் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு கேட்டது.
இந்த வெடி விபத்தால் அந்தக் கட்டடம் சிதறி நொறுங்கியது. இதில் ஒரு ஊழியர் சிக்கி பலியானார். மற்ற 7 பேரும் படுகாயமடைந்தனர். அவர்களில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த விபத்தைத் தொடர்ந்து தஸ்தகீரை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications