கருணாநிதிக்கு தேவர் சமூக மக்கள் பாடம் புகட்ட வேண்டும்-ஜெ
மதுரை: மதரை, பூவந்தி கிராமத்தில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 100 அடி உயர சிலைக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று அடிக்கல் நாட்டினார்.
அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் சார்பில் மதுரை அருகே உள்ள பூவந்தியில், 100 அடி உயரத்தில் பிரமாண்ட தேவர் சிலை அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவும், 2ம் படை வீடு அமைக்கும் விழாவும் பூவந்தியில் இன்று நடந்தது.
இதில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கலந்து கொண்டார். அவருக்கு தாரை, தப்பட்டை முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜெயலலிதாவை அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற முன்னணி தலைவர் டாக்டர் சேதுராமன் வரவேற்றார்.
பின்னர் தேவர் சிலைக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார் ஜெயலலிதா. இந்த நிகழ்ச்சியில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் தாவூத் மியா கான், இந்திய தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது, தமிழ் மாநில முஸ்லீம் லீக் தலைவர் ஷேக் தாவூத், மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் ரவி வாண்டையார் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேசுகையில், சென்னை நந்தனம் பகுதியில், அண்ணா சாலையில், தேவர் திருமகனாருக்கு எனது ஆட்சிக்காலத்தில்தான் சிலை நிறுவப்பட்டது.
இப்போது 100 அடியில் அமையவுள்ள இந்த தேவர் சிலைக்கு அடிக்கல் நாட்டும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.
தேவர் திருமகனார், தேசியத்தையும், தெய்வீகத்தையும் தனது இரு கண்களாகக் கொண்டவர். ஆனால் முதல்வர் கருணாநிதியோ, தேச விரோத சக்திகளுக்கு ஊக்கம் அளித்து வருகிறார்.
தேவர் திருமகனாரின் கொள்கைகளை அவமதிக்கும் வகையில் நடந்து வரும் கருணாநிதிக்கு வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தேவர் சமூக மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றார்.
இதையடுத்து பசும்பொன் வந்த ஜெயலலிதா அங்கு முத்துராமலிங்கத் தேவரின் நூற்றாண்டு விழா மற்றும் குருபூஜை விழாவில் பங்கேற்று தேவரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.












Click it and Unblock the Notifications