எனக்கு வந்த ஆபத்தில் சிக்கிய கிருஷ்ணசாமி-பி.டி.குமார்
மதுரை: முதுகுளத்தூர் அருகே என்னை தாக்க வந்த மர்ம கும்பலின் பிடியில் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி மாட்டிக் கொண்டார் என்று திராவிட விழிப்புணர்வு கழக தலைவர் பி.டி.குமார் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணசாமியின் காரில் பின்னால் வந்த பி.டி.குமார் உடனே காரை நிறுத்தி தப்பி ஓடியவர்களை பிடிக்க முயன்றபோது தவறி விழுந்து காயமடைந்தார்.
இதையடுத்து கத்தி குத்தால் மயங்கி கிடந்த கிருஷ்ணசாமியை ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பிவிட்டு தானும் சிகிச்சை பெற மதுரை அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார் குமார்.
அப்போது அவர் கூறுகையில்,
தமிழக காங்கிரஸ் தலைவர் சென்ற காருக்கு பின்னால் 3வது காரில் நானும், எனது ஆதரவாளர்களும் வந்து கொண்டிருந்தோம். அப்போதுதான் 50 பேர் கொண்ட கும்பல் திடீரென்று கிருஷ்ணசாமியின் காரை வழிமறித்து தாக்கியது.
எனது காரில் இருந்து இதனை கண்ட நான் கிருஷ்ணசாமியை காப்பாற்றுவதற்காக காரில் இருந்து இறங்கி ஓடினேன். அதற்குள் அந்த கும்பல் அவரை தாக்கிவிட்டு தப்பி ஓடியது.
கிருஷ்ணசாமியை தாக்கியவர்களை பிடிக்க ஓடியபோது நான் தடுமாறி கீழே விழுந்து விட்டேன். இதில் எனக்கு காலில் காயம் ஏற்பட்டது. பின்னர் சுதாரித்து எழுந்த நான் காரில் மயங்கி கிடந்த கிருஷ்ணசாமியை ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன்.
கிருஷ்ணசாமி மீது நடந்த தாக்குதல் அவரை தாக்க குறி வைத்து நடந்தது அல்ல. இந்த சம்பவம் என்னை தாக்கவே நடந்தது. ஆனால் எனக்கு வைத்த குறியில் கிருஷ்ணசாமி மாட்டிக் கொண்டார் என்றார் குமார்.












Click it and Unblock the Notifications