நாஞ்சில் சம்பத் ஜாமீனில் விடுதலை
நிலக்கோட்டை: சிறையில் அடைக்கப்பட்டிருந்த மதிமுக கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத்தை ஜாமீனில் விடுவித்து நிலக்கோட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டில் நடந்த மதிமுக பொதுக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதியையும், திமுகவைச் சேர்ந்த அமைச்சர்களையும் அவதூறாக பேசியதால் அந்த பொதுக்கூட்டத்தில் திமுகவினர் சிலர் கல் மற்றும் சோடா பாட்டில் வீசி தாக்குதல் நடத்தினர்.
தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யாமல், திமுக அரசை விமர்சித்த காரணத்திற்காக நாஞ்சில் சம்பத்தை போலீசார் கைது செய்து வழக்கு தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாஞ்சில் சம்பத்தை அட்டாக் பாண்டி உள்ளிட்ட சில ரவுடிகள் சிறைக்குள் வைத்து தாக்கியதை அடுத்து அவர் உடனடியாக திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்த வழக்கிலிருந்து நாஞ்சில் சம்பத்தை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று நிலக்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞர் செல்லப்பாண்டியன் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் கருணாநிதி, நாஞ்சில் சம்பத்தை ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.