மத்திய, மாநில அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்: பாஸ்போர்ட், தபால் அலுவலக பணிகள் பாதிப்பு
சென்னை: 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் சுமார் 1 கோடி மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஊழியர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காலியிடங்களை நிரப்ப வேண்டும், இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும், அரசு வேலைகளில் அவுட் சோர்சிங் முறையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 18 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக மத்திய அரசு அலுவலகங்கள் பெரும்பாலும் முடங்கியுள்ளன. மாநில அரசுகளின் ஊழியர்களும் இதில் பங்கேற்றுள்ளனர்.
சென்னையில் தபால் அலுவலகங்கள், பிற மத்திய அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் வரவில்லை. இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.
இதேபோல மாநில அரசு அலுவலகங்கள் சிலவற்றிலும் ஊழியர்கள் வராமல், அலுவலகங்கள் வெறிச்சோடியுள்ளன. இருந்தாலும் பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வந்திருந்ததால் பணிகள் பாதிக்கப்படவில்லை.
அதேபோல அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் பெரும்பாலான பள்ளிகள் வெறிச்சோடிக் கிடந்தன.
தமிழகத்தில் 2 லட்சம் மாநில அரசு ஊழியர்களும், 3 லட்சம் ஆசிரியர்களும், வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருப்பதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
பாஸ்போர்ட், தபால் அலுவலக பணிகள் பாதிப்பு:
அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் இன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் குறைவான ஊழியர்களே வேலைக்கு வந்திருந்தனர்.
மக்கள் அதிகம் வரும் மத்திய அரசு அலுவலகங்களான தபால் மற்றும் தந்தி அலுவலகங்கள், பாஸ்போர்ட், சுங்க இலாகா, வருமானவரி உட்பட பல அலுவலகங்களில் அன்றாட பணிகள் பாதித்தன. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ரயில்வே துறை ஊழியர்கள் எவரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications