கிருஷ்ணசாமி மீதான தாக்குதலுக்கு போலீஸ் மெத்தனமே காரணம்-ராமதாஸ்
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி மீது முதுகுளத்தூர் அருகே நடத்தப்பட்ட தாக்குதலுக்கு காவல் துறையின் பாதுகாப்பு குறைவே காரணம் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
ராமதாசுக்கு கிருஷ்ணசாமி சம்பந்தி என்பது குறிப்பிடத்தக்கது.
ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி முதுகுளத்தூர் அருகே நேற்று வன்முறையாளர்களால் தாக்கப்பட்டிருக்கிறார். இந்தக் கொலை வெறித் தாக்குதலில் இருந்து அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்திருக்கிறார்.
வேறு யாரையோ தாக்கத் திட்டமிட்டவர்கள். அடையாளம் தெரியாமல் இவரைத் தாக்கியிருக்கிறார்கள் என்று காவல்துறையினர் சந்தேகப்படுவதாகவும், அதனால் இந்தத் தாக்குதல் சம்பவத்தை அவர்கள் மிகக் கடுமையான நிகழ்வு என்று எடுத்துக் கொள்ளவில்லை என்றும் காவல்துறை வட்டாரத் தகவல்கலை மேற்கொள் காட்டி சில பத்திரிகைகளில் செய்தி வெளி வந்திருக்கிறது. இவையெல்லாம் உண்மை எனில் தமிழகக் காவல்துறையினரின் இந்த மெத்தனப்போக்கு மிக வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அந்தப் பகுதி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக கடந்த சில நாட்களாக அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டு வந்திருக்கிறது.
தென்மாவட்ட கலெக்டர்களும், காவல்துரை உயர் அதிகாரிகளும் பலமுறை கூடி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். எந்தவித அசம்பாவித சம்பவமும் நடந்து விடாமல் தடுப்பதற்கான அனைத்து முன் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றெல்லாம் அதிகாரிகள் அன்றாடம் தெரிவித்து வந்திருக்கிறார்கள்.
இவற்றையெல்லாம் மீறி காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் அந்தப் பகுதியில் கொலை வெறி கும்பலால் தாக்கப்பட்டிருக்கிறார். முதுகுளத்தூர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் சென்று கொண்டிருந்த போது அவரது பாதுகாப்புக்காக ஒரு காவலர் கூட உடன் செல்லவில்லை என்று சொல்லப்படுகிறது.
சம்பவம் நடந்த இடத்திற்கு மிக அருகாமையில் உள்ள ஒரு ஊரில் காவலர்கள் குவிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்கள் கூட இந்தத் தாக்குதல் பற்றிய சதி செயலை முன்கூட்டியே அறிந்து அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்றும் தெரியவருகிறது.
எனவே பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் மேற்கொண்ட ஏற்பாடுகள் அனைத்தும் மேலோட்டமாக எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கையே. முன்கூட்டியே அறிந்து வருமுன் காக்கும் நடவடிக்கைகள் காவல் துறையினர் கோட்டை விட்டிருக்கிறார்கள் என்பது இந்தத் தாக்குதல் சம்பவம் புலப்படுத்துகிறது.
உளவுத்துறையினர் சரியாக செயல்பட்டிருந்தால் தமிழக காங்கிரஸ் தலைவர் மீதான கொலைவெறி தாக்குதலை தடுத்து நிறுத்தியிருக்க முடியும். அவருடன் பாதுகாப்புக்காக காவலர்கள் சென்றிருந்தாலும் தாக்குதலை தடுத்திருக்க முடியும்.
பாதுகாப்பு என்பது குறிப்பிட்ட ஓரிரு தலைவர்களுக்கு மட்டும் தான் என்கிற கண்ணோட்டத்துடன் செயல்படும் போக்கை காவல்துறையினர் மாற்றிக் கொள்ள வேண்டும். ஆட்சியில் இருப்பவர்களுக்கும், ஆட்சியில் இருந்தவர்களுக்கும், குறிப்பிட்ட சில குழுக்களால் அச்சுறுத்தல் உள்ளவர்களுக்கு மட்டுமே பாதுகாப்பு என்ற பாகுபாடான நிலைமை கூடாது.
ஒவ்வொரு தலைவரும் நீதிமன்றத்திற்கு சென்றுதான் தங்களுக்குத் தேவையான பாதுகாப்பை கோரி பெற வேண்டும் என்ற நிலைமை ஏற்படுவது காவல் துறையினருக்கும் அரசுக்கும் இழுக்கைத் தேடி தரும் என்பதை உணர்ந்து செயல்பட முன்வர வேண்டும்.
வேறு யாரோ என்று நினைத்து தவறாக தமிழக காங்கிரஸ் தலைவரை தாக்கியுள்ள நிகழ்வை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு முக்கிய தலைவர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கக் காவல்துறையும், அரசும் முன்வர வேண்டும்.
தமிழக காவல்துறை மிக உன்னதமான நிலையில் இருந்தது என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால் கடந்த சில வருடங்களாகக் காவல் துறையைப் பற்றி தெரிவிக்கப்பட்டு வந்துள்ள கருத்துக்கள் அதன் நற்பெயருக்கு பெருமை சேர்ப்பதாக இல்லை. காவல் துறையினரால் ஈரல் கெட்டுவிட்டது என்றும் காவல் துறைக்கு ஈரலே இல்லை என்று அண்மைக் காலமாக சொல்லப்பட்டு வந்திருக்கிறது.
அதிமுக ஆட்சி என்றால் ஜெயலலிதாவின் ஏவலுக்கு கட்டுப்பட்டு செயல்படும் காவல்துறை என்றும், திமுக ஆட்சி என்றால் கருணாநிதியின் கட்டளைக்கு பணிந்து நடக்கும் என்றும் மாறி மாறி தமிழக காவல் துறை குற்றச்சாட்டுக்கு இலக்காகி வந்திருக்கிறது.
இந்த நிலைமை முற்றிலும் மாற வேண்டும். மக்களின் பாதுகாவலர்கள் என்ற பெயர்தான் தமிழக காவல் துறைக்கு பெருமை சேர்ப்பதாக இருக்கும். இழந்துவிட்ட பழைய உன்னத நிலையை அடைய உதவும் என்பதை உணர்ந்து காவல்துறை செயல்பட முன்வர வேண்டும். ஆட்சியில் யார் இருந்தாலும் அவர்களும் நமது காவல்துரை இழந்துவிட்ட பெருமையை மீண்டும் பெற உறுதுணையாக இருக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications