தேவருக்கு அஞ்சலி: கருணாநிதிக்கு சு.சுவாமி கண்டனம்
சென்னை: முத்துராமலிங்கத் தேவரின் சிந்தனைகளுக்கும், செயல்களுக்கும் கொஞ்சம் கூட ஒத்துப் போகாத முதல்வர் கருணாநிதி, அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியிருப்பது கபட நாடகம் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், பசும்பொன் தேவர் திருமகனார் நிறைந்த இறைபக்தி கொண்டவர். ஆனால் கொஞ்சம் கூட கடவுள் நம்பிக்கை இல்லாதவர் கருணாநிதி.
தினந்தோறும் பூஜை செய்து, கடவுளை வழிபட்டு, இந்து மதத்தின் தீவிரப் பற்றாளராக விளங்கியவர் தேவர் திருமகனார். ஆனால் இந்துக்களைத் திருடர்கள் என்று கூறியவர் கருணாநிதி.
ராமர் பிரானை புனித அவதாரமாக கருதியவர் தேவர் திருமகனார். ஆனால் அந்த ராமரை குடிகாரர் என்று விமர்சித்தவர் கருணாநிதி.
ஆங்கில ஏகாதிபத்தியத்தை கடுமையாக எதிர்த்தவர் தேவர் திருமகனார். ஆனால் கருணாநிதியோ, பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்குத் துணையாக இருந்தவர்.
அரசியல் கொள்கை மட்டுமல்லாது, தனிப்பட்ட வாழ்க்கையிலும், தேவர் திருமகனாரின் சிந்தனைகளுடன் ஒத்துப் போகாதவர் கருணாநிதி. அப்படிப்பட்டவர், தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தச் சென்றது கபட நாடகம் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications