முஷாரப் வீடு அருகே குண்டுவெடிப்பு-2 பேர் பலி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் பெர்வேஸ் முஷாரப் வீட்டு அருகே இன்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் முஷாரப்பின் பாதுகாவலர்கள் 2 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
அதிபர் முஷாரப்பின் அதிகாரப்பூர்வ இல்லம் ராவல்பிண்டியில் உள்ளது. அங்குள்ள அயூப் பார்க் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் இன்று பயங்கர சப்தத்துடன் குண்டுவெடித்தது.
அப்போது அதிபர் முஷாரப், மாநில முதல்வர்கள், ஆளுநர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார்.
குண்டு வெடித்த சப்தம் பல கிலோமீட்டர்களுக்கு அப்பாலும் கேட்டுள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் பெரும் குழப்பம் காணப்படுகிறது. பலர் படுகாயங்களுடன் சாலைகளில் விழுந்து கிடந்தனர். இந்த குண்டுவெடிப்பில் முஷாரப்பின் பாதுகாவலர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பு குறித்து ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது கூறுகையில் இது ஒரு தற்கொலைப் படைத் தாக்குதல் என்று தோன்றுகிறது. அதிபருக்கு எந்த ஆபத்தும் இல்லை. அவர் நலமுடன் இருக்கிறார் என்றார்.
சம்பவம் நடந்த பகுதியை ராணுவத்தினர் முற்றுகையிட்டுள்ளனர். ராவல்பிண்டி மற்றும் இஸ்லாமாபாத்தில் உச்சகட்ட நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதிபரைக் குறி வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக தெரிகிறது.
இதற்கிடையே, தலைநகர் இஸ்லாமாபாத்துக்குள் 3 தற்கொலைப் படைத் தீவிரவாதிகள் புகுந்துள்ளதாக உளவுப் பிரிவுக்குத் தகவல் கிடைத்துள்ளது. எனவே தலைநகர் முழுவதும் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications