காஷ்மீர் பிரச்சனைக்கு நேரு தான் காரணம்-அத்வானி
லக்னெள: முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் தவறான கொள்கை தான் காஷ்மீர் பிரச்சனை இந்தளவு வளர்வதற்கு முக்கிய காரணம் என்று பாஜக தலைவர் அத்வானி குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்து அவர் பேசியதாவது,
மத்தியில் தொடர்ந்து பல ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்து வந்த காங்கிரஸ் அரசு உள்நாட்டு பாதுகாப்பை தொடர்ந்து பலவீனமாகவே கையாண்டு வந்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்தபோது இந்தியா பல்வேறு சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்தது.
அவற்றை இந்தியாவுடன் இணைக்கும் பொறுப்பை அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் திறமையாக கையாண்டு அதில் வெற்றி கண்டார். ஆனால் ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை நேரு கையில் எடுத்தார்.
தனது முயற்சியில் தோல்வியடைந்து இந்த பிரச்சனையை ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு சென்றார். அவரது தவறான கொள்கை முடிவுகளே இன்று மாநிலத்தில் நிலவும் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம்.
உள்நாட்டு பாதுகாப்பு விஷயத்தை தொடர்ந்து காங்கிரஸ் அரசு தவறாக கையாண்டு வந்தது. இதன் காரணமாக 1962ம் ஆண்டு சீன ஆக்கிரமிப்புக்கு அடி பணிந்து தோல்வியை தழுவியது. தீவிரவாதம் மற்றும் நக்சல் பிரச்சனையிலும் தோல்வியை கண்டு வருகிறது என்றார்.
உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி மகாத்மா காந்தியை குற்றம் சாட்டிய நிலையில் அத்வானி நேருவை குறை கூறியுள்ளது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications