சம்பத் விவகாரம்: அமைச்சர் மீது நடவடிக்கை கோரும் மதிமுக
கரூர்: நாஞ்சில் சம்பத் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முக்கிய காரணமான தமிழக வருவாய் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மீது உடனே நடவடிக்கை எடுக்க வேணடும் கரூர் மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
மதிமுக கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கைது செய்யப்படதற்கு கடும் கண்டனம் தெரிவித்து கரூர் மதிமுக சார்பில் அவசர கூட்டம் நடைபெற்றது.
அப்போது கரூர் நகர செயலாளர் பா.கி.தங்கராசு செய்தியாளர்களிடம் கூறியதாவது, நாஞ்சில் சம்பத் நாடறிந்த ஒரு நல்ல பேச்சாளர். நற்றமிழ் பேச்சாளர். அவரை தண்டிக்க வேண்டும் என்றே தீய நோக்கத்துடன் திமுக அரசு கைது செய்துள்ளது. இதை கரூர் மதிமுக மிக வன்மையாக கண்டிக்கிறது.
வத்தலகுண்டில் போலீசாரிடம் முறையாக அனுமதி பெற்று பொது கூட்டம் போடப்பட்டுள்ளது. இந்த பொதுக் கூட்டத்தில் வன்முறை ஏற்படுத்திய அமைச்சர் ஐ.பெரியசாமி மீது உடனே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை சிறையில் ரவுடிகள் சம்பத்தை தாக்கியது மிகவும் கண்டிக்கதக்கது.
தமிழக முதல்வர் தன் மீதும், உள்ளாட்சி துறை அமைச்சர் மீதும் தகாத வார்த்தைகள் பேசியதாக கூறியதோடு, நாஞ்சில் சம்பத் தாக்குதலுக்கு திமுகவினர் காரணம் அல்ல என கூறுவது வேடிக்கையானது.
இந்தத் தாக்குதல் தமிழக முதல்வர் கூறித் தான் நடத்தப்பட்டுள்ளது என தெரியவருகிறது. நாஞ்சில் சம்பத் பொதுக் கூட்டத்தில் வன்முறை ஏற்படுத்திய அமைச்சர் பெரியசாமி மீது உடனே உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என்றார்.












Click it and Unblock the Notifications