நிரம்புகிறது பூண்டி ஏரி-வெள்ள அபாயம்: 'சென்னையில் ஓராண்டுக்கு குடிநீர் பஞ்சம் வராது'
Click here for more images |
திருவள்ளூர்: சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியான பூண்டி நீர்த் தேக்கம் வேகமாக நிரம்பி வருகிறது.
இதனால் 35 அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் தற்போது நீர் மட்டம் 32.57 அடியை எட்டிவிட்டது.
மேலும் ஆந்திராவின் கண்டலேறு அணை நீர், அம்மாபள்ளி அணைக்கட்டு, திருத்தணி, இலுப்பூர், பாண்டூர் ஆகிய பகுதிகளிலிருந்து வரும் நீரும் பூண்டி ஏரியை வந்தடைகிறது.
இதனால் இன்றே பூண்டி ஏரி முழுமையாக நிரம்பும் நிலை உருவாகியுள்ளது.
இதையடுத்து ஏரியிலிருந்து 1,000 வினாடிக்கு கன அடி முதல் 2,000 கன அடி வரை தண்ணீர் திறந்துவிட திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால் ஏரியின் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஓராண்டுக்கு தண்ணீர் பஞ்சம் வராது:
இதற்கிடையே கன மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளும் நிரம்பிவிட்டதால் அடுத்த ஓராண்டுக்கு நகரில் தண்ணீர் பஞ்சம் வராது என சென்னை குடிநீர் வழங்கல்துறை தலைமைப் பொறியாளர் சிவகுமரன் கூறியுள்ளார்.
சென்னை மாநகரத்திற்கு தினமும் 6,000 கோடி லிட்டர் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதில் 300 கோடி லிட்டர் தண்ணீர் தொழிற்சாலைகளுக்கு தரப்படுகிறது. மேலும் 300 கோடி லிட்டர் நீர் சென்னையின் சுற்றுப்புற பகுதிகளுக்கு வழங்கப்படுகிறது.
இந் நிலையில் சிவகுமரன் கூறுகையில்,
பூண்டி, ரெட்ஹில்ஸ், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் திருப்தி தரும் அளவுக்கு நிரம்பிவுள்ளன. பெரும்பாலான ஏரிகள் 75 சதவீதம் நிரம்பிவிட்டன. இதுதவிர மழை நீர் சேகரிப்பு திட்டமும் வெகுவாக கை கொடுத்துள்ளது.
இதனால் வரும் 2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை தாராளமாக தினமும் தண்ணீர் வழங்கலாம். குடிநீர் பஞ்சத்திற்கு வாய்ப்பே இல்லை என்றார்.