என்டிடிவி நிருபரை தாக்கிய பீகார் எம்எல்ஏ
பாட்னா: ஒரு கொலை தொடர்பாக ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏவிடம் பேட்டி எடுக்க சென்ற பிரபல தனியார் தொலைக்காட்சி நிருபரை அந்த எம்எல்ஏ காட்டு மிராண்டித்தனமாக தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்தவர் ஆனந்த் சிங். இவர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏவாக இருக்கிறார். ரேஷ்மா என்ற பெண் கொலை செய்யப்பட்டது தொடர்பாக இவர் சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
இந்த கொலை தொடர்பாக ஆனந்த் சிங்கிடம் கருத்து கேட்பதற்காக பிரபல தனியார் தொலைக்காட்சியான என்டிடிவியின் நிருபர் பிரகாஷ்சிங் கேமரா மேனுடன் சென்றார்.
பேட்டி எடுக்க சென்ற தனியார் டிவியின் நிருபர் பிரகாஷ் சிங் மற்றும் கேமராமேனை எம்எல்ஏவும் அவருடைய பாதுகாவலர்கள் மற்றும் தொண்டர்களை சேர்ந்து கடுமையாக தாக்கி கேமராவை உடைத்து நொறுக்கியதுடன் என்டிடிவி ஒளிபரப்பு செய்யும் வேன் சாவியையும் பிடுங்கி வைத்துக் கொண்டனர்.
இந்த தாக்குதலால் அதிர்ச்சியடைந்த அனைத்து தொலைக்காட்சி நிருபர்களும் உடனே எம்எல்ஏ ஆனந்த் சிங்கின் வீட்டு முன்னர் கூடி அவரை கைது செய்யக் கோரி கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து அந்த எம்எல்ஏ கைது செய்யப்பட்டார்.
லாலு கண்டனம்:
தனியார் தொலைக்காட்சி நிருபரை தாக்கியவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ரேஷ்மா என்ற பெண் கொலை செய்யப்பட்டது தொடர்பாக பீகாரில் வரும் வெள்ளியன்று (நாளை) ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பாக முழு கடையடைப்பு நடத்தப்படும் என்று லாலு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications