For Daily Alerts
Just In
ஒரே குடும்பத்தில் 3 பேர் தீக்குளித்து தற்கொலை
சென்னை: சென்னை தாம்பரத்தில், மூத்த மகள் இறந்த சோகத்தில், அவரது தாயும், சகோதர, சகோதரியும் சிலிண்டரை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டனர்.
தாம்பரம், கிருஷ்ணமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (69). இவரது மனைவி ராமரத்னம் (49). இவர்களுக்கு பவானி (25), மீனாட்சி (20), கணபதி (18) என மூன்று குழந்தைகள் இருந்தனர்.
குடும்பத்தில் யாருக்கும் சரியான வேலை இல்லை, இதனால் நிலையான வருமானமும் இல்லாத நிலை. குடும்பத்தில் கடன் சுமையும் அதிகம் இருந்து வந்தது.
உடல் நலம் சரியில்லாததால் அவரை மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். அங்கு செவ்வாய்க்கிழமை பவானி மரணமடைந்தார். இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு நான் இறந்த பின்னரும் நீங்கள் எல்லாம் வாழப் போகிறீர்களா என்று கேட்டுள்ளார்.
இது ராமரத்னத்தையும், மீனாட்சி, கணபதியையும் மனம் உடையச் செய்துள்ளது. இதையடுத்து மருத்துவமனையிலேயே அவர்கள் 3 பேரும் தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தற்கொலை செய்ய முயன்றனர். மருத்துவமனையில் இருந்தவர்கள் 3 பேரையும் காப்பாற்றியுள்ளனர்.
இந்த நிலையில் மகளின் இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகளைச் செய்யும் பணியில் ராதாகிருஷ்ணன் ஈடுபட்டிருந்தார். பவானியின் உடல் வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.
அப்போது கதவைப் பூட்டிய ராமரத்னம் சிலிண்டரைத் திறந்து காஸை பரவ விட்டார். பின்னர், பவானியின் உடலைக் கட்டிக் கொண்டு 3 பேரும் படுத்துக் கொண்டனர். இதையடுத்து தீப்பெட்டியைப் பற்ற வைத்து தீக்குளித்தனர்.
சிலிண்டர் வெடித்ததில் 3 பேரும் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும், சோகமும் நிலவுகிறது.
Comments
Story first published: Saturday, December 15, 2007, 20:57 [IST]