மாணவியைக் கடத்தி ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல்
தர்மபுரி: தர்மபுரி அருகே கல்லூரி மாணவியை கடத்தி ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தர்மபுரி அருகேயுள்ள ஒட்டபட்டியை சேர்ந்தவர் அண்ணாமலை. அரசு ஊழியரான இவருக்கு திருமணமாகி மகள் இருக்கிறார்.
அண்ணாமலையின் மகள் அப்பகுதியில் உள்ள பாலிடெக்னிக்கில் படித்து வருகிறார். சம்பவத்தன்று காலையில் வழக்கம்போல் பாலிடெக்னிக் கிளம்பி சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை.
இதனால் பெற்றோர் மகளை காணாமல் பல இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் இரவு 7 மணிக்கு அண்ணாமலையின் வீட்டுக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
அதில் பேசிய நபர், உங்கள் மகளை நாங்கள் கடத்தி வைத்துள்ளோம். அவர் உயிருடன் வேண்டுமென்றால் ரூ.5 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த அண்ணாமலை இதுகுறித்து போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் கடத்தப்பட்ட மாணவியை தீவிரமாக தேடிவருவதுடன், தொலைபேசி எங்கிருந்து வந்தது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.