பொள்ளாச்சியில் வைகோ உண்ணாவிரதம்
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.
சேலம் ரயில்வே கோட்டம் இன்று துவக்கப்படுகிறது. ஆனால், இந்தக் கோட்டத்துக்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டிய பொள்ளாச்சி, கிணத்துகடவு ஆகிய பகுதிகள் கேரளத்தின் பாலக்காடு கோட்டத்துடன் இணைக்கப்பட்டுவிட்டன.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அந்த பகுதிகளை மீண்டும் சேலம் கோட்டத்துடன் இணைக்கக் கோரியும் பொள்ளாச்சியில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார். வைகோ. அவருடன் ஏராளமான மதிமுகவினரும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.
வைகோ விழாவில் ரகளை:
இந் நிலையில் நேற்று திருச்சியில் வைகோ கலந்து கொள்ளவிருந்த விழாவில் இருவர் புகுந்து ரகளையில் ஈடுபட்டதோடு மதிமுக கொடிகளையும் கிழித்தனர். இதனால் பதட்டம் ஏற்பட்டது.
கரூர் பைபாஸ் ரோட்டில் குடமுருட்டி செல்வராஜ் நினைவு கல் வெட்டு திறப்பு விழாவில் வைகோ பங்கேற்க இருந்தார்.
இதையொட்டி மதிமுகவினர் கொடி, தோரணம், டிஜிட்டல் பேனர்கள் வைத்திருந்தனர். இந் நிலையில் அங்கு வந்த இருவர் மதிமுக கொடி கம்பத்தை பிடுங்கியதுடன், கொடிகளையும் கிழித்து எறிந்தனர்.
இதையடுத்து அங்கு வந்த மதிமுவினர் திரண்டு வந்த அந்த இருவரையும் சரமாரியாக அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.