பாஜகவுக்கு கெளடா போடும் 12 நிபந்தனைகள்
பெங்களூர்: கர்நாடகத்தில் பாஜக ஆட்சி சுமூகமாக நடக்க வேண்டுமானால் மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் 12 நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என்று பாஜகவுக்கு மதச்சார்பற்ற ஜனதாதள தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவெ கெளடா கூறியுள்ளார்.
கர்நாடகத்தில் பாஜக ஆட்சி அமைக்க மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இரு கட்சிகளும் சேர்ந்து ஆளுநரிடம் தங்களுக்கு ஆதரவாக இருக்கும் 129 எம்.எல்.ஏக்களின் ஆதரவுப் பட்டியலை கொடுத்துள்ளனர்.
ஆனால் இதுவரை ஆளுநர் எந்த முடிவையும் அறிவிக்காமல், பாஜகவை ஆட்சி அமைக்க அழைக்காமல் உள்ளார். இதனால் பாஜக கெடு விதித்துள்ளது.
இந்த நிலையில், பாஜகவுக்கு தேவெ கெளடா புதிதாக 12 நிபந்தனைகளை விதித்துள்ளார். இதைக் கடைப்பிடித்தால்தான் ஆட்சி சுமூகமாக நடக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்குக்கு கெளடா அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகள் வருமாறு
1. எட்டியூரப்பா முதல்வராக இருக்கலாம்.
2. துணை முதல்வர் பதவி மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்குத் தரப்பட வேண்டும்.
3. மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் செய்தித் தொடர்பாளராகவும், சட்டசபைக் கட்சியின் தலைவராகவும் குமாரசாமி செயல்படுவார். குமாரசாமியுடன் கலந்து பேசிய பின்னர்தான் அமைச்சர்கள் நியமனம் மேற்கொள்ளப்பட வேண்டும். இலாகாக்கள் ஒதுக்கப்பட வேண்டும்.
4. சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பாக அரசு செயல்பட வேண்டும். ஊழலை எதிர்த்துப் போராடும் அரசாக செயல்பட வேண்டும்.
5. கட்சிக்குள் ஏற்படும் பிரச்சினைகளை, கட்சியினருக்கு ஏற்படும் குறைகளை எட்டியூரப்பா, குமாரசாமி மூலம்தான், தனிப்பட்ட முறையிலான கூட்டங்களின் மூலமாகத்தான் தீர்க்க வேண்டும்.
6. இரு கட்சிகளின் உறுப்பினர்கள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு நியமிக்கப்பட வேண்டும். அதற்கு குமாரசாமி தலைவராக இருப்பார்.
7. இரு கட்சிகளையும் சேர்ந்த மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் பரஸ்பரம் யார் மீதும் புகார் கூறக் கூடாது. குற்றம் சுமத்தக் கூடாது.
8. முக்கிய நிர்வாகப் பதவிகளுக்கான நியமனங்கள் குமாரசாமியை கலந்து ஆலோசித்த பிறகே மேற்கொள்ளப்பட வேண்டும்.
9. அட்வகேட் ஜெனரல், அரசு வக்கீல்கள் உள்ளிட்டவர்களை மதச்சார்பற்ற ஜனதாதளத்துடன் ஆலோசித்த பிறகே நியமிக்க வேண்டும்.
10. தற்போது நடந்து வரும் வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்டப் பணிகள் தடைபடாத வகையில் அமைச்சரவை முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
11. நாடாளுமன்றத்திற்கு திடீரென இடைத் தேர்தல் வந்தால் சட்டசபையையும் கலைக்க பாஜக முன்வர வேண்டும். தேர்தலை இரு கட்சிகளும் தனித் தனியாக சந்திக்க வேண்டும்.
12. மேற்கண்ட நிபந்தனைகளில் ஏதாவது மீறப்பட்டால் இரு கட்சிகளும் தங்களது கூட்டணியிலிருந்து விலகிக் கொள்ள முழு சுதந்திரமும் உள்ளது என்று கூறியுள்ளார் கெளடா.
ஆனால் இந்த புதிய நிபந்தனைகள் குறித்து எட்டியூரப்பாவும், மாநில பாஜக தலைவர் சதானந்த கெளடாவும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 21 மாதங்களுக்கு முன்பு இரு கட்சிகளும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படியே தற்போது நாங்கள் ஆட்சி அமைக்கவுள்ளோம். அந்த ஒப்பந்தத்தையே நாங்கள் மதிக்கிறோம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் இரு கட்சிகளுக்கும் இடையே சுமூக உறவு இன்னும் ஏற்படவில்லை, இந்த ஆட்சியும் நீடிக்காது என்று காங்கிரஸ் கட்சி நம்பிக்கையுடன் உள்ளது.
இதற்கிடையே, கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. குடியரசுத் தலைவர் தற்போது டெல்லியில் இல்லை. அவர் டெல்லி திரும்பியதும் இதுதொடர்பான உத்தரவு வெளியாகும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications