எந்தத் தேர்தலிலும் கூட்டணியே கிடையாது - விஜயகாந்த்
சேலம்: எந்தத் தேர்தலிலும் யாருடனும் கூட்டணி வைக்க மாட்டோம் என்று தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
சேலத்தில் தேமுதிக பிரமுகர் இல்லத் திருமணத்தில் விஜயகாந்த் கலந்து கொண்டார். அப்போது அவர் தொண்டர்கள் புடை சூழ பேசுகையில், சேலத்தில் தேமுதிகவினர் கட்-அவுட் வைக்கக் கூடாது என்று கடந்த 30ம் தேதியே பிரச்சனை கொடுக்க தொடங்கி விட்டனர்.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் எங்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கு தொடர்ந்தார். அரசியல் கட்சிகள் கட்-அவுட் வைப்பது தொடர்பாக நாங்கள் எதுவும் சொல்ல இயலாது என்று சொல்லி மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
அரசும், அதிகாரிகளும் கட்-அவுட் வைக்க அனுமதிக்கவில்லை என்றுதான் நீதிமன்றத்துக்கு சென்றோம். ஆனால் அங்கேயும் நியாயம் கிடைக்கவில்லை. கடைசியில் மக்கள் மன்றத்தை நாடி வந்துள்ளோம். இதற்கு நீங்கள் தான் நல்ல தீர்வு சொல்ல வேண்டும்.
மதுரையில் தேவர் ஜெயந்தி அன்று சிலைக்கு முதல் ஆளாக மாலை போட காத்திருந்தேன். முதல்வர் வருகிறார் என்று கூறி என்னை போலீசார் கடைசியில் தான் அனுமதித்தார்கள். நான் மாலை போட்ட போது அங்கு போலீஸ் பாதுகாப்பே இல்லை. அனைத்து போலீசாரும் திமுகவினரின் கட்-அவுட்டை பாதுகாக்க சென்றுவிட்டனர்.
போலீசாரின் இந்த மெத்தனப் போக்கால் தான் தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி மர்ம கும்பலால் தாக்கப்பட்டார்.
தமிழக மக்களுக்கு இந்த அரசு எந்த நன்மையும் செய்யாததால் வேலை வாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் வழிகாட்டியின்றி உள்ளனர். இளைஞர்களுக்கு வழிகாட்ட ஆட்சி மாற்றம் வர வேண்டும்.
தொலைக்காட்சியில் கூட என்னை காட்ட விடாமல் ஆளுங்கட்சியினர் மிரட்டி வருகிறார்கள். என்னை தொலை காட்சியில் காட்டாவிட்டாலும் அவற்றையெல்லாம்விட பெரிய திரையாக மக்களின் மனத்திரை உள்ளது.
தேர்தலில் எந்த கட்சியுடனும் தேமுதிக கூட்டணி இல்லை. மக்களுடன் தான் எங்கள் கூட்டணி. மக்களையும், தெய்வத்தையும் மட்டுமே நம்பி தேர்தலில் நிற்போம். ஏழை சாதியினர் தான் தேமுதிகவில் உள்ளனர். நாட்டில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர தொண்டர்கள் எல்லாம் பிரச்சார பீரங்கியாக செயல்பட வேண்டும் என்றார் விஜயகாந்த்.
பின்னர் மண்டபத்தை விட்டு வெளியே வந்த விஜயகாந்த், திறந்த வேனில் ஏறிக் கொண்டார். பின்னர் அதில் நின்றபடியே அவர் தொடர்ந்து பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், அரசியலில் அடிதடி, வெட்டுகுத்து, அராஜகம் எல்லாம் நடக்கிறது. ஆனால் தேமுதிகவினர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள். உங்கள் தாய்மார்களுக்கு நல்லது செய்யுங்கள். நம்மால் முடியும் என்று இருக்க வேண்டும். முடியாது என்ற வார்த்தை முட்டாள்களுக்கு மட்டுமே சொந்தாமானதாகும்.
நான் தற்போது இங்கு நடுரோட்டில் நின்று பேசுகிறேன். வேறு எந்த அரசியல்கட்சியினரும் இப்படி பேச முடியுமா. இந்த விஜயகாந்திடம் எதை வேண்டுமானாலும் விலை கொடுத்து வாங்கிவிடலாம். ஆனால் தைரியத்தை மட்டும் விலை கொடுத்து வாங்க முடியாது.
தேமுதிக தொண்டர்கள் அனைவரும் பிரச்சார பீரங்கிகளாக செயல்படவேண்டும். தமிழகத்தில் எந்த நேரத்திலும் தேர்தல் வந்தாலும் தேமுதிக தனித்து நின்று வெற்றி பெறும் என்றார் விஜயகாந்த்.