மீண்டும் புயல் சின்னம் - கனமழை
சென்னை: வங்கக்கடலில் மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. சென்னையில் காலை முதல் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. சில நாட்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில் மறுபடியும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
வங்கக் கடலில் இலங்கைக்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது மேலும் வலுப்பெற்று தமிழகத்தின் மீது பரவியிருப்பதால் கனத்த மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் பரவலாக கன மழை பெய்து வருகிறது. புதுச்சேரியிலும் கன மழை பெய்கிறது.
தலைநகர் சென்னையில் இன்று காலை முதல் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் அதிகபட்சமாக நேற்று அருப்புக்கோட்டையில் 70 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அம்மாவட்டத்தின் சாத்தூர், விருதுநகர், கோவில்பட்டி ஆகிய இடங்களில் நேற்று மட்டும் 3 மணிநேரத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது.
நெல்லையில்...
பாளையங்கோட்டை, குழித்துறை, சங்கராபுரம், ஆகிய இடங்களில் 50 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குற்றாலத்தின் மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ச்சை தாண்டி விழுவதால் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில்....
ஈரோடு மாவட்டத்திலும் கனமழை பெய்துள்ளது. கவுந்தம்பாடி அருகேயுள்ள மணியபுரம் ராமநாதபுரத்தில் பெய்த கனமழைக்கு நேற்றிரவு பாப்பாத்தி என்ற பெண் மழைக்காக ஒரு வீட்டில் ஒதுங்கி நின்று கொண்டிருந்த போது வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் உடல் நசுங்கி இறந்தார்.
இது தவிர கோத்தகிரி, மருங்காபுரி, மேட்டுபாளையம், நாகர்கோவில், திருத்தணி, திருவள்ளூர், உத்தமபாளையம் உட்பட பல இடங்களில் நன்றாக மழை பெய்துள்ளது.
புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications