காங்கிரஸில் இணைந்த சிவகங்கை நகராட்சித் தலைவர்
சிவகங்கை: திமுகவில் சீட் கிடைக்காமல் சுயேச்சையாகப் போட்டியிட்டு, தற்போது சிவகங்கை நகராட்சித் தலைவராக இருந்து வரும் நாகராஜன், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
சிவகங்கை நகராட்சித் தலைவராக இருந்த முருகன் சில மாதங்களுக்கு முன்பு கார் குண்டு மூலம் கொல்லப்பட்டார். இதையடுத்து சமீபத்தில் நகராட்சித் தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. இதில் சுயேச்சை கவுன்சிலரான நாகராஜன் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நாகராஜன் திமுககாரர். ஆனால் திமுகவில் கவுன்சிலர் சீட் கிடைக்காததால் சுயேச்சையாகப் போட்டியிட்டு, போட்டியின்றி வெற்றி பெற்றவர். தற்போது நகராட்சித் தலைவராகவும் உயர்ந்துள்ளார்.
இந்த நிலையில், நாகராஜன் திடீரென காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் நாகராஜன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
நிழ்ச்சியில், ப.சிதம்பரம் பேசுகையில், 2011ம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் இப்போதிருந்தே காங்கிரஸ் கட்சி முனைப்புடன் செயலாற்ற வேண்டும். கட்சியில் நிறைய இளைஞர்களை சேர்க்க வேண்டும். அடிமட்ட அளவிலிருந்து கட்சியைப் பலப்படுத்த வேண்டும்.
ஆள் மாறாட்டம் காரணமாக தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்படியே இருந்தாலும் கூட இந்த சம்பவத்தை போலீஸார் தீவிரமாக விசாரித்து உண்மையை வெளிக்கொணர வேண்டும் என்றார் சிதம்பரம்.












Click it and Unblock the Notifications