கன்னியாகுமரி ரப்பர் தொழிற்சாலைக்கு நிலம் ஆர்ஜிதம்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் அமையவுள்ள ரப்பர் தொழிற்சாலைக்கு நில ஆர்ஜிதம் பணிகள் வரும் டிசம்பர் 15ம் தேதிக்குள் முடிவடையும் என்று தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ் ராஜன் தெரிவித்தார்.
சட்டம், நீதி மேம்பாட்டு சங்கம், காந்தி காமராஜர் ராஜீவ் தேசிய கூட்டமைப்பு, மத்திய அரசின் ரப்பர் வாரிய கழகம் ஆகியவற்றின் வழிகாட்டுதல் முலம் ரப்பர் பொருள் உற்பத்தி கருத்தரங்கு நாகர்கோவில் புன்னைநகரில் நடைபெற்றது. ரப்பர் வல்லுனர் அலேக்சாண்டர் வரவேற்றார்.
அமைச்சர் சுரேஷ் ராஜன் கருத்தரங்கை தொடங்கி வைத்த பின்னர் பேசியதாவது,
கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்னை, நெல், வாழை, ரப்பர் சாகுபடி நல்ல நிலையில் நடந்து வருகிறது. நாட்டில் முதல் தரமான ரப்பர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. மாவட்டத்தில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் தொழிற்சாலை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
1996 முதல் 2001 வரை திமுக ஆட்சி இருந்தபோது உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி, படித்த இளைஞர்கள் வேலையில்லாததால் மோதலில் ஈடுபடுகிறார்கள். அதை தவிர்க்க தென் மாவட்டங்களில் தொழிற்சாலைகள் தொடங்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்திருந்தது.
அந்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு தென் மாவட்டங்களில் தொழில் தொடங்க திமுக அரசு முடிவு செய்தது. அதன்படி நாங்குநேரியில் தொழில்நுட்ப பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால் அதன்பின் வந்த அதிமுக அரசு நாங்குநேரி தொழில் நுட்ப பூங்கா உள்பட அனைத்து திட்டங்களையும் கைவிட்டு விட்டது. தற்போது மீண்டும் திமுக அரசு அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது.
குமரி மாவட்டத்தில் செண்பகராமன் புதூரில் ரப்பர் தொழிற்சாலை தொடங்க 240 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் 170 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அதை சமப்படுத்தி மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. டிசம்பர் 15க்குள் அங்கு முதற்கட்ட பணிகள் முடிவடையும் என்றார்.