கூடுதல் கட்டண புகார்: ஆம்னி பேருந்துகளில் ரெய்ட்!
சென்னை: சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பிற வெளியூர்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளில் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர்.
தீபாவளிப் பண்டிகை இன்னும் ஓரிரு நாட்களில் வரவுள்ளது. இதையொட்டி சென்னையில் தங்கியுள்ள வெளியூர்க்காரர்கள் குறிப்பாக தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று கொண்டிருக்கின்றனர்.
வழக்கமான ரயில்கள், சிறப்பு ரயில்கள் ஆகியவற்றில் டிக்கெட் கிடைக்காததால் பெரும்பாலானவர்கள் கடைசி நேரத்தில் அரசுப் பேருந்துகளை நாடியுள்ளனர். ஆனால் அரசுப் பேருந்துகளின் டிக்கெட்டுக்களை இடைத்தரர்கள் பலர் வாங்கி அதை பெரும் விலைக்கு விற்று வருகின்றனர்.
போலீஸ் ரெய்ட்:
இந்த நிலையில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று இரவு திடீரென போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.
இன்ஸ்பெக்டர் அழுகுசோலமலை தலைமையிலான போலீஸார் ஆம்னி பேருந்துகளில் பயணிப்போரிடம் எவ்வளவு பணம் கொடுத்து டிக்கெட் வாங்கினீர்கள் என்று கேட்டறிந்தனர். மேலும் ஆம்னி பேருந்துகளின் டிரைவர்களிடமும் அவர்கள் விசாரித்தனர்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் அழகுசோலமலை கூறுகையில், அதிக அளவில் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. இதுதொடர்பாக விசாரித்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாகவே இந்த சோதனை. இது இன்னும் 3 நாட்களுக்குத் தொடரும் என்றார்.
காரணம் புரோக்கர்கள்தான்:
இதற்கிடையே, அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதாக வரும் புகார்களை மறுத்துள்ள தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம், இதற்குக் காரணம் புரோக்கர்கள்தான் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து சங்க நிர்வாகி பெரியண்ணா கூறுகையில், இதுகுறித்த புகார்கள் வந்தவுடன், எங்களது உறுப்பினர்களுக்கு நாங்கள் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளோம். அதில், கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளோம்.
புரோக்கர்கள் சிலர்தான் கூடுதலாக கட்டணத்தை வசூலிக்கின்றனர். ஆம்னி பேருந்துகள் வழக்கமான கட்டணத்துடன்தான் சென்று கொண்டிருக்கின்றன என்றார்.












Click it and Unblock the Notifications