திட்டமிட்டபடி தேர்தல் நடக்கும்: முஷாரப்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நேர்மையான, நியாயமான தேர்தல் நடத்தப்படும். அதுதான் எனது முக்கியப் பணியாக இருக்கும் என அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் முஷாரப் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்கள் சரமாரியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். நாடு முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
இந்த நிலையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் நேற்று முதல் முறையாக ஆளுங் கூட்டணித் தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
அப்போது திட்டமிட்டபடி தேர்தலை நடத்த வேண்டும். அதில் எந்த மாற்றமும் தேவையில்லை என்று முஷாரப் அறிவுறுத்தினாராம்.
மேலும் தேர்தல் தொடர்பாக இன்னும் ஒரு வாரத்தில் முஷாரப் முடிவெடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் பிரதமர் செளகத் அஜீஸ், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் தலைவர் செளத்ரி சுஜாத் ஹூசேன் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அவசர நிலை நீண்ட நாட்களுக்கு நீடிக்காது என்றும் தலைவர்களிடம் முஷாரப் உறுதியளித்ததாக தெரிகிறது.
இந்தக் கூட்டத்தில், நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்தும் முஷாரப், தலைவர்களுடன் விவாதித்தார்.